/

தலையணை தண்ணீர் பெறுவதில் சிக்கல்: 9 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பு பாழாகும் அபாயம்!

தலையணையிலிருந்து உள்ளார் முறியபாஞ்சன் வழியாக 13 ஆயக்கட்டுகளுக்கு தண்ணீர் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதால் 9 ஆயிரம் ஏக்கரில் பாசனப்பரப்பு பாழாகும் அபாயத்தில் உள்ளதாகக் கூறி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவாசயிகள் வெள்ளிக்கிழமை

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:09 am

ஆர். முருகன்

தலையணையிலிருந்து உள்ளார் முறியபாஞ்சன் வழியாக 13 ஆயக்கட்டுகளுக்கு தண்ணீர் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதால் 9 ஆயிரம் ஏக்கரில் பாசனப்பரப்பு பாழாகும் அபாயத்தில் உள்ளதாகக் கூறி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவாசயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தலையணையில் இருந்து வரும் தண்ணீரானது ராயகிரி பாகம் 2-இல் முறியபாஞ்சன் என்ற இடத்தில் உள்ளார் வழியாக ஒரு ஆற்றுப் பாதையிலும், ராசிங்கபேரி குளத்துக்கு மற்றொரு பாதையிலும் பிரிந்து செல்கிறது. உள்ளார் வழியாக வரும் தண்ணீரானது உள்ளார், தளவாய்புரம், ராயகிரி, மேலகரிசல்குளம், கீழ கரிசல்குளம், தென்மலை, துரைசாமியார்புரம், இடையன்குளம், எட்டிச்சேரி, இனாம்கோவில்பட்டி வழியாக 13 ஆயக்கட்டு குளங்களுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். இதுதொடர்பாக, உள்ளாமுறியபாஞ்சன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 1998-இல் அப்போதைய மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ஏற்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி 13 குளங்களுக்கு தண்ணீர் செல்ல வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

இதையேற்று உள்ளார் முறியபாஞ்சன் வழியாக 13 குளங்களுக்கு தண்ணீர்  கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் ராசிங்கபேரி குளத்து விவசாயிகள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் 13 ஆயக்கட்டு குளங்களுக்கு இடைக்கால நிவாரணமாக மணல்வாரி மூலம் தண்ணீர்வர ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கு முடிந்தவுடன் தண்ணீர் செல்ல தடையில்லை எனவும் அப்போதைய கோட்டாட்சியர் வாக்குறுதி அளித்தார்.

இப்போது வழக்கானது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் எந்தவித தடையும் இல்லை. இந்த நிலையில், கடந்த 8.5.2014 அன்று ஆற்றின் வெள்ளத்தில் கரையை அரித்துக் கொண்டு வழக்கமாக தண்ணீர் செல்லும் பாதையான உள்ளார் வழியாக 13 ஆயக்கட்டு குளங்களுக்கும் தண்ணீர் வரத்  தொடங்கியது. ஆனால், மற்றொரு தரப்பினர் தங்களது பாதையில் மட்டுமே தண்ணீர் வர வேண்டும் எனக் கூறி உள்ளார் பாதையை அடைக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, இரு தரப்பு விவசாயிகளையும் தென்காசி கோட்டாட்சியர் அழைத்து 2 முறை சமாதானப் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இரு சமாதான பேச்சுவார்த்தையிலும் ஆற்று நீரை அடைக்கமாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால், வியாழக்கிழமை (அக்.30) அதிகாரிகள் ஆற்று நீரை அடைத்துவிட்டனர். இதனால், 13 ஆயக்கட்டுகளுக்கு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. இதனால்,  உள்ளார் முதல் தென்மலை வரை 4 ஆயிரம் ஏக்கர் நிலமும், அதன் பிறகு சங்கரன்கோவில் வட்டம், கலிங்கப்பட்டி வரையிலும் மேலும் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுவது தடைபட்டுள்ளது. எனவே, ஆற்று நீரை 13 ஆயக்கட்டு குளங்களுக்கு திறந்துவிட வலியுறுத்தி 13 கிராம மக்களும் 16-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை திரண்டு வந்தனர்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சிலரை மட்டும் ஆட்சியரை சந்தித்து முறையிட போலீஸார் அனுமதித்தனர். சம்பவ இடத்தை சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு உரிய உத்தரவு அளிப்பதாகக் கூறி விவசாயிகளை அனுப்பி வைத்தார் ஆட்சியர்.

ஆனால், விவசாயிகள் அனைவரும் ஆட்சியர் அலுவலகத்தைவிட்டு செல்லாமல் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உதவி ஆணையர்கள் மாதவன்நாயர், கந்தசாமி ஆகியோரது தலைமையில் 100-க்கும் மேற்பட்ட  போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டக் காரர்களை எச்சரித்தனர். பின்னர், அவர்களை கைது செய்வதாகக் கூறி வாகனத்தில் ஏற்றினர். சிறிது நேரத்தில் அனைவரையும் விடுவித்து அவரவர் கிராமத்துக்கு செல்ல எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.