: தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி கிளைகளை கணினி மயமாக்கும் திட்டம் தொடர்பாக அலுவலர்களுடனான சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி கிளைகள் அனைத்தையும் கணினிமயமாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமை வகித்தார். துணைப் பொதுமேலாளர் கே.சண்முகம் முன்னிலை வகித்தார்.
இதில், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநர் கே.எம்.வெள்ளியங்கிரி பங்கேற்று பேசியதாவது: மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் 25 மாவட்ட அளவிலான வங்கிகளும், 180 தொடக்க கிளைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு மத்தியகால கடன், நீண்ட கால கடன், விவசாய நகை கடன் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான வேளாண்மை கருவிகள், டிராக்டர் போன்றவைகள் வாங்குவதற்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் கடன் விவரங்கள் முழுவதும் பதிவேடுகளிலும், கணிப்பொறிகளில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டது. இதை மாற்றும் வகையிலும், மற்ற தேசிய வங்கி கிளைகளை போல் விவசாயிகளுக்கு சேவை வழங்கும் வகையில் நவீனமாக்குவதற்காக தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணினிமயமாக்கி இணைய தள வசதியை அடுத்த வரும் 3 மாதத்திற்குள் நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், எவ்வாறு பதிவு செய்வது குறித்து அரசு அனுமதிபெற்ற ஆன்வர்டு இ சர்வீஸ் நிறுவனத்தின் அலுவலர்கள் பயிற்சி அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் தனியார் மென்பொருள் நிறுவனத்தினர் கணக்கு பதிவேடுகளை கணிப்பொறிகளில் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், 18 மாவட்ட வங்கிக் கிளைகளைச் சேர்ந்த மேலாளர்கள், செயலர்கள் மற்றும் அலுவலர்கள் என 120 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் செய்திருந்தனர்.