தமிழ்நாடு உயிர் பண்ணைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பங்களிப்போடு 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மண்டல வனபாதுகாவலர் வெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு உயிர் பண்ணைப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பங்களிப்போடு மலையடிவார விளைநிலங்களில் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் வனத்துறையால் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மா, பலா, சப்போட்டா, எலுமிச்சை, நாவல், வேலாமரம், புளி மற்றும் நீண்ட கால பயன் தரும் தேக்கு, மருதமரம், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளையும் வைத்து விவசாயிகள் பயனடையலாம்.
இத்திட்டத்தில் பயன் அடைய இருக்கிற விவசாயிகளின் விளைநிலங்களில் போதுமான தண்ணீர் வசதியுடன், மரக்கன்றுகள் வளரும் தன்மையுடைய நிலமாகவும் இருப்பது அவசியம் ஆகும். இதில் ஒரு ஏக்கருக்கு 200 முதல் 250 மரக்கன்றுகள் வரையில் வைத்துக் கொள்ளலாம். இந்த நிலங்களில் என்னென்ன வகையான மரக்கன்றுகள் வைத்தால் பயனுள்ளவையாக இருக்கும் என்பதை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற விவரங்களுடன், தேவைப்படும் மரக்கன்றுகள் ஆகியவை குறித்து அந்தந்த பகுதி வனத்துறை அதிகாரிகளை அணுகி தெரிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே நாத்தாங்கால் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட இருக்கிறது. இந்த மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வைத்து தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ஒரு மரக்கன்றுக்கு தலா ரூ.5 பராமரிப்பு ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்தொகை மரக்கன்றுகளில் இருந்து பலன் எடுக்கும் வரையில் 6 ஆண்டுகள் வரையில் வழங்கப்படும்.
இதேபோல், உயிர் பண்ணை பாதுகாப்பு திட்டம் மூலம் புல் முதல் விலங்கினங்கள் பாதுகாக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் விலங்கினங்கள் தரைப்பகுதிக்குள் வந்து பயிர்களை நாசம் செய்வதை தடுக்கப்பட இருக்கிறது. இதற்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அடர்த்தியாகவும் விரைவாகவும் வளரும் தன்மையுடைய மரக்கன்றுகள் வைக்கப்பட இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி அடிவார கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரும் தங்கள் வருவாயை உயர்த்திக் கொள்ளும் வகையில் பலன் தரும் மூலிகை மற்றும் பலன் தரும் கொங்குலிங்கம்(சாம்பிராணி), லவங்க பட்டை மரக்கன்றுகள் வைக்கப்பட இருப்பதாகவும் மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.