இதுதொடர்பாக அச்சங்கத்தின் கரூர் மாவட்டத்தலைவர் வி.கே.தங்கவேல் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி வந்த கேரள அரசின் கபடத்தனம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஏதோ தனக்கு மட்டுமே முல்லைப் பெரியாறு அணை சொந்தம் என எண்ணிக்கொண்டு இறுமாப்புடன் நீதிமன்றங்களுக்கு தாழ்பணியாமல் தனக்குத்தானே அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றிய கேரள அரசுக்கு இது ஒரு சவுக்கடி. அணை பலமாக இருக்கிறது என தமிழக அரசு வாதிட்ட போதும், பலவீனமாக இருப்பதாக கூறி, இதுவரை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இனியாவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, இறுமாப்பை கைவிட்டு, தமிழகத்தில் உள்ளவர்களும் விவசாய நண்பர்கள்தான் என நினைத்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு முன்வரவேண்டும்.