/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:37 am

சி. சுரேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் கருங்கல் - இனயம் கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழ்குளம் பகுதியில் சென்றபோது, வேகமாக வந்த மினி டெம்போவை சந்தேகத்தின் பேரில் நிறுத்த சைகை காட்டினர். வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் பின் தொடர்ந்து துரத்திச் சென்றனர். 5 கி.மீட்டர் தூரம் துரத்தி பாலூர் பகுதியில் வைத்து மினி டெம்போவை மடக்கிப் பிடித்தனர். அதன் ஓட்டுநர், கிளீனர் தப்பியோடிவிட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் மினி டெம்போவை சோதனை செய்தபோது அதில் பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். வாகனத்தை மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸôரிடம் ஒப்படைக்கப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.