/

மதுரை: பெண்ணைக் கட்டிப்போட்டு 65 பவுன் தங்கநகைகள் கொள்ளை

மதுரையில் பெண்ணைக் கட்டிப்போட்டு தாக்கிய மர்மநபர்கள் 65 பவுன் தங்கநகைகளையும் புதன்கிழமை கொள்ளைடித்துச்சென்றனர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:19 am

ஜெயப்பாண்டி

மதுரையில் பெண்ணைக் கட்டிப்போட்டு தாக்கிய மர்மநபர்கள் 65 பவுன் தங்கநகைகளையும் புதன்கிழமை கொள்ளைடித்துச்சென்றனர்.

  மதுரை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சுசிலா (58). இவர் மகன் ரஞ்சித்துடன் வசித்துவருகிறார்.  செவ்வாய்க்கிழமை இரவு ரஞ்சித் வெளியே செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். மகன் வருவதற்காக வீட்டின் கிரில்கேட்டை மட்டும் சார்த்திய சுசிலா மரக்கதவை பூட்டாமல் தூங்கிவிட்டாராம்.

  இந்தநிலையில், நள்ளிரவில் வீட்டிற்குள் 3 மர்மநபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் சுசிலாவை எழுப்பியதுடன், அவர் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியையும் பறித்துள்ளனர். உடனே அவர் சத்தமிட்டுள்ளார். இதனால் அவரைத் தாக்கிய மர்மநபர்கள் கை, கால்களைக் கட்டிப்போட்டு நகைகள், பணம் இருக்குமிடத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். வங்கி லாக்கரில் இருப்பதாக சுசிலா கூறியுள்ளார். இதனால் அவரைக் கடுமையாக மர்மநபர்கள் தாக்கியுள்ளனர்.

  தாக்குதலில் பயந்துபோன  சுசிலா பீரோ சாவி இருக்குமிடத்தை கூறியுள்ளார். உடனே மர்மநபர்கள் பீரோவிலிருந்த 65 பவுன் தங்கநகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். மர்மநபர்கள் சென்று நீண்டநேரமான பின்னர் கட்டுகளை அவிழ்த்த சுசிலா அக்கம்பக்கத்தினரிடம் கொள்ளையர் குறித்து கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் சுசிலாவின் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

  அதன்பின்னர் அண்ணாநகர் குற்றப்பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸôர் சென்று பார்த்தபோது கொள்ளை நடந்த பகுதி கருப்பாயூரணி போலீஸ் எல்லை எனத்தெரியவந்தது. இதையடுத்து கருப்பாயூரணி போலீஸôர் விரைந்துவந்தனர். போலீஸ் மோப்பநாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

   கும்பல் தாக்கியதில் காயமடைந்த சுசிலா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொள்ளை குறித்து கருப்பாயூரணி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.