கருணாநிதி யாருடன் இருக்கிறார் என்பதை முடிவு செய்துகொள்ளட்டும்: டி.ராஜா
நாங்கள் யாரோடு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். கருணாநிதி யாரோடு இருக்கிறார் என்பதை அவர் முடிவு செய்துகொள்ளட்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய


நாங்கள் யாரோடு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். கருணாநிதி யாரோடு இருக்கிறார் என்பதை அவர் முடிவு செய்துகொள்ளட்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா.
கடலூரில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாடு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கு மக்கள் தீர்ப்பளிக்கக் கூடிய தேர்தலாக இது விளங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கையால் நாடு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதன் விளைவாக விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.அதே நேரத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வரத் துடிக்கிறது. பாரதிய ஜனதா கட்சியால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர் மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வேட்பாளர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தனக்கு நடந்த திருமணத்தை பகிரங்கமாக அறிவிக்காமல் சட்டரீதியான நெருக்கடி வரும்போது மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் எத்தகைய ஒழுக்கத்தை பெற்றுள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதவாத அரசு அமைவதை மக்கள் தடுக்க முன்வர வேண்டும்.
கூடங்குளம் அணு உலையில் 3 மற்றும் 4 வது விரிவாக்கத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோல் மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூபிலும் அணு உலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய திட்டங்களை அறிவிக்ககூடாது என்ற தேர்தல் ஆணைய விதிமுறை மீறிய செயலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும் என்பதில் இடதுசாரி கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது. இடதுசாரிகள் வலிமையுடன் இருந்தால் தாங்கள் நினைத்ததை செய்ய முடியாது என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் செயல்பட்டு வருகின்றன. இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவோம். இந்தியாவை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.
நாங்கள் யாரோடு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். கருணாநிதி யாரோடு இருக்கிறார் என்பதை அவர் முடிவு செய்யட்டும். மின் தட்டுப்பாட்டுக்கு சிலரது சதியே காரணம் என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் பொதுவாக பேசாமல் சதிக்கு காரணமானவர்கள் யார் என்பதை மக்களுக்கு முதல்வர் தெரிவிக்க வேண்டும். தேர்தல் ஆணைய விதிமுறைகளை, அனைத்து அரசியல் கட்சிகளும் மதித்து நடக்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. தேர்தல் ஆணையத்துக்கு போதிய அதிகாரம் இல்லாததே காரணம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் எம்.சேகர், நகர செயலர் குளோப் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...