பேரறிவாளன் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு: திருமாவளவன்
பேரறிவாளனிடம் சிபிஐ அதிகாரிகள் வாக்கு மூலம் பெற்றது தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.


பேரறிவாளனிடம் சிபிஐ அதிகாரிகள் வாக்கு மூலம் பெற்றது தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக சேலத்துக்கு திங்கள்கிழமை வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஏற்காடு தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு சுமார் ஒரு லட்சம் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் அனைத்தும் திமுக வேட்பாளர் மாறனுக்கே கிடைக்கும். இந்த தேர்தல் நடுநிலையுடன் நடத்தப்பட்டால் திமுக வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.வரும் 27-ம் தேதி உலககெங்கும் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் கடைப்பிடிக்க உள்ளனர். சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டுவதை லட்சியமாகக் கொண்டு அதற்கு உறுதி ஏற்கும் நாளாக இந்த ஆண்டு மாவீரர் நாளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற உள்ளது. அதற்குள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை தொடங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் இயற்ற வேண்டும். இந்த விஷயத்திலும் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாடாளுமன்ற தீர்மானத்துக்காக பிரதமரை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் மனு அளிக்கும். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மணியை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனிடம் வாக்கு மூலம் பெற்றது தொடர்பாக சிபிஐ முன்னாள் அதிகாரியின் பேட்டி, பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது.எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரின் தண்டனையை ரத்து செய்வதுடன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் ஆலோசனை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...