ஆந்திரத்தைப் பிரிப்பதால் புதுவையைச் சேர்ந்த ஏனாம் பகுதிக்கு பாதிப்பு
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதால் அதை ஒட்டியுள்ள புதுவை மாநில பிரதேசமான ஏனாமும் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதால் அதை ஒட்டியுள்ள புதுவை மாநில பிரதேசமான ஏனாமும் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏனாம் பகுதிகளை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை ஒட்டி உள்ளது ஏனாம்.
தனக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கல்வி போன்றவற்றுக்கு ஆந்திரத்தை முழுமையாக சார்ந்துள்ளது ஏனாம். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஏனாமில் 51 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் ஆட்சியாளர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஏனாம் பகுதிக்கு 30 மில்லியன் கன அடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து ஒப்பந்தப்படி அம்மாநில அரசு நீரை வழங்கி வருகிறது.
தற்போது ஆந்திரத்தை, தெலங்கனா மற்றும் சீமாந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் கோதாவரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் பிரச்னை எழுந்துள்ளது.
சீமாந்திரா மாநிலமே, கோதாவரி தண்ணீருக்காக தெலங்கானாவை நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. தற்போது சீமாந்திரா நிர்வாகத்தினர் பிரிட்டிஷ் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பின்பற்றுவார்களா என ஏனாம் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
புதுவை மாநில அரசு ஏனாம் பகுதி மக்களின் உரிமை, பாதுகாப்பை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுதொடர்பாக ஏனாம் மக்கள் உரிமைகள் கழக தலைவர் பி.விஷ்ணு மூர்த்தி கூறியதாவது:
புதுவை மாநில அரசு உடனே தலையிட்டு மத்திய அமைச்சர்கள் குழு, உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேச வேண்டும். உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏனாம் பகுதி தனது பங்கு இயற்கை வளத்தை இழந்து விடும்.
கோதாவரி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் பெறும் 30 மில்லியன் கன அடி நீரை விரைவில் 100 மில்லியன் கன அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் விவசாயம், குடிநீர், தொழில்துறைக்கு தேவையான நீரை பெறலாம்.
ஏனாம் பகுதியிலும் மக்கள் தொகை பெருகி வருகிறது. மத்திய அமைச்சர்கள் குழுவும் நதி நீரைப் பிரிப்பது தொடர்பாக தனி கவனம் செலுத்த வேண்டும்.
புதுவை யூனியன் பிரதேசத்துடன் தனியாக நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நடவடிக்கை மாநில அரசு தலையிட்டு எடுக்க வேண்டும்.
மேலும் தெலங்கானா, சீமாந்திரா மாநிலங்களுக்கும், ஏனாம் பகுதிக்கும் இடையே பஸ் போக்குவரத்து சுமூகமாக நடைபெற தேவையான ஒப்பந்தத்தையும் செய்து கொள்ள வேண்டும்.
ஏனாமில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசதிக்காக சீமாந்திரா கல்வி வாரியத்தின் கீழ் கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும். மேலும் மின்விநியோகம் தொடர்பாகவும் தனியாக ஒப்பந்தம் செய்து மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தைப் பெற நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர்கள் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...