எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தொழிலாளி தலையை துண்டித்து கொன்றதாக ஒருவர் கைது

பள்ளிப்பாளையத்தில் சாயப்பட்டறைத் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:53 am

தமிழ்ச்செல்வன்

பள்ளிப்பாளையத்தில் சாயப்பட்டறைத் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

பள்ளிப்பாளையம் அருகே ஆவித்திப்பாளையத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தின் அருகே காவிரி ஆற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்து பள்ளிப்பாளையம் போலீஸார், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில், கொலையுண்டவர் ஆவித்திப்பாளையத்தைச் சேர்ந்த மலையப்பனின் மகன் ஆமையன் என்கிற ரவி(33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆவித்திப்பாளையம் பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த செங்கோட்டையனின் மகன் பொய் சேகர்(26) என்பவருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து ஆவித்திப்பாளையம் நீரேற்று நிலையத்தின் அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த ஆமையன் ரவியின் தலை மீட்கப்பட்டதுடன், கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், பள்ளிப்பாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த தல சிவா என்ற சிவா என்பவரிடம் ஆமையன் ரவி வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவரிடம் வாங்கிய பணத்தை ஆமையன்ரவி திருப்பித்தராததால் இருவரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிவா மீது ஆமையன் ரவி போலீஸில் கந்தவட்டி புகார் அளிப்பதாக தெரிவித்தாராம். இதனால், ஆத்திரமடைந்த சிவா கைது செய்யப்பட்ட பொய்சேகர் தலைமையில் 7 பேர் கொண்ட கும்பலை நியமித்து ஆமையன் ரவியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.

இதையடுத்து, இக்கொலை வழக்கில் தொடர்புடைய சிவா உள்ளிட்ட 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் மறைப்பு

பள்ளிப்பாளையத்தில் கந்துவட்டி தொழில் செய்து வந்த தல சிவா என்கிற சிவாவிடம் 2010ஆம் ஆண்டு விசைத்தறி தொழிலாளி குடும்பம் கடன் வாங்கியுள்ளனர். தொகையை திருப்பிச் செலுத்த முடியாததால் சிவா தலைமையிலான கும்பல் விசைத்தறி தொழிலாளி வீட்டு பெண்ணை கடத்திச் சென்று ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டது. இச்சம்பவத்தை எதிர்த்து போராட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலர் வேலுச்சாமி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிபிசிஐடி போலீஸார் வசமுள்ள இக்கொலை வழக்கில் தல சிவா, ஆமையன் ரவி உள்பட பலர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆமையன் ரவி அப்ரூவராக மாற முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. அவர் அப்ரூவராக மாறும்பட்சத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தண்டனை கிடைக்கும் என அச்சமடைந்த தல சிவா உள்ளிட்டோர் ஆமையன் ரவியை கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலுக்கு பதிலளிக்க போலீஸார் மறுத்துவிóட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.