விருதுநகரில் இரண்டு நாள்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வந்தார். அதில்,முதல் நாள் இரவில் கலைஞர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் விழா மற்றும் மக்களவை தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் இரவில் விருதுநகர்-சாத்தூர் 4 வழி்ச்சாலையில் உள்ள ஆர்.ஆர்.நகர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.பின்னர், ராமமூர்த்தி சாலையில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று நடந்த இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அதில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 ஊராட்சி ஒன்றியம், 9 பேரூராட்சிகள் மற்றும் 7 நகராட்சிகளில் இளைஞரணிகளின் செயல்பாடுகளான பொதுமக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இதில் கலந்து கொண்ட தலைமைக் கழக முக்கிய பிரமுகர்கள், மாவட்ட அளவில் பிரமுகர்கள், பொதுமக்கள் பிரதிநிதிதள் யார் என்பது குறித்து ஒவ்வொரு பகுதியின் நிர்வாகிகளையும் அழைத்து பதிவேடுகளை பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.எனவே வருகிற மக்களவை தேர்தலை முன்னிட்டு கிராமங்களிலும், நகரங்களிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இளைஞரணியினருக்கு ஆலோசனை வழங்கினார். அதோடு, ஒவ்வொரு பகுதியிலும் சுறுசுறுப்பாக செயல்படும் படியும் இளைஞரணி நி்ர்வாகிகள் அனைவரையும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.