கன்னியாகுமரி செல்லும் சாலையில், நிலம் எடுப்புத் துறை டிஆர்ஓ ரவிச்சந்திரன், தாசில்தார் டுரூஸ் மற்றும் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ அருண் சத்யா ஆகியோர் இன்று காலை வந்தனர். நிலத்தை அளவிட வந்த அவர்களுடன் போலீஸ் தரப்பில் தக்கலை டிஎஸ்பி காந்தி, கன்னியாகுமரி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட போலீஸாரும் வந்தனர். ஆனால், பொதுமக்கள் மற்றும், புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பினர் சிலர் மறியல் செய்தனர். அவர்களுடன் அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. புறவழிச்சாலை தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே, அது முடிந்த பின்னர் கையகப்படுத்தலாம் என்று கூறினர். ஆனால், அதிகாரிகள் தரப்பு மறுக்கவே, மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. போலீஸார் மக்களை கைது செய்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நிலம், வீடுகள் மரங்களை அதிகாரிகள் அளவிட்டனர். இதனால் போக்குவரத்து அங்கே பெரும் பாதிப்புக்கு உள்ளானது. வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.