வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

1.30 லட்சம் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு: அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

2012-13-ம் ஆண்டில் தமிழகத்தில் 1.30 லட்சம் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:22 am

ஜெபலின்ஜான்

2012-13-ம் ஆண்டில் தமிழகத்தில் 1.30 லட்சம் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்ற புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

 வருவாய்த்துறைக்கு உயிர்நாடியாக இருப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். எனவே, காலியாக இருந்த 12,604 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் 9,105 பணியிடங்கள் இப்போது நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுப்பார்.

 அதிமுக ஆட்சியில்தான் கிராம நிர்வாக அலுவலர் பதவி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வுசெய்யும் முறை கொண்டுவரப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நவீன கார்கள் வழங்கப்பட்டுள்ளன.

 நிலஅளவைத் துறையில் பழைய அளவை முறைகளை அகற்றப்பட்டு, இப்போது டோட்டல் ஸ்டேசன் என்ற நவீன கருவி வழங்கப்பட்டு அதன் மூலம் அளவை பணிகள் நடைபெற்று வருகின்றன. சிட்டாவை கணினி மூலம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 ஏழைகளுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1.23 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டன. 2012-13-ம் ஆண்டில் இதுவரை 1.17 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் 1.30 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்.

 250 சதுர கி.மீ. பரப்பில் 1 முதல் 5.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் புதிய வட்டங்கள் உருவாக்க வருவாய்த்துறை உயர்அதிகாரிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 70 நாள்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதல் 30 நாள்கள் நிலஅளவை பயிற்சியும், அடுத்த 40 நாள்கள் நிர்வாகப் பயிற்சியும் அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் 118 மையங்களில் 4,516 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது  என்றார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மாவட்ட நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் ப.முருகன், பெருந்துறை  ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.பெரியசாமி, துணைத் தலைவர் ராமசாமி, வட்டாட்சியர்கள் சுசிலா (ஈரோடு), ஜான்சிராணி (பெருந்துறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.