சேலம் பழைய பஸ் நிலையம் வணிக வளாகத்தில் நடைபாதையில் வசித்து வருபவர் சாமுவேல். இவரது மனைவி லட்சுமி (27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த மற்றொரு ஆதரவற்ற பெண்ணின் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற லட்சுமியிடம், அங்கிருந்த ஊழியர்கள் பிரசவம் பார்க்க வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.ஆனால் பணம் கொடுக்க வழியில்லாததால் வெளியேற்றப்பட்ட லட்சுமி, வணிக வளாகம் அருகேயுள்ள கழிப்பிடத்தின் பின்பகுதியில் ஆதரவற்ற பெண்ணின் உதவியுடன் குழந்தை பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளிநாயகம் விசாரணை நடத்தினார். ஆனால் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று அவர் கூறினார்.