பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து(42). இவர் குவைத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக செல்போனில் எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசியபோது லண்டனைச் சேர்ந்த மார்க்கஸ் ஒயிட்டும், மும்பையைச் சேர்ந்த ரோஹிதாவும் ரூ 9 லட்சம் பணம் கட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ஐசிஐசிஐ வங்கியில் மெகா ரிவர் சேல்ஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சோனைமுத்து ரூ 9 லட்சம் பணம் கட்டியுள்ளார். மேலும் ரூ 5 லட்சம் பணம் கட்டும்படி கூறியதால் சந்தேகமடைந்த சோனைமுத்துவின் மனைவி முத்துலட்சுமி இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மார்க்கஸ் ஒயிட், ரோஹிதா ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.