நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தருமபுரி வன்முறைச் சம்பவம்: 40 ஏக்கர் நிலக்கடலை சேதம்

தருமபுரி வன்முறைச் சம்பவம் அச்சத்தால் விவசாயப் பணிகளைச் செய்ய கூலி ஆள்களும், விவசாயிகளும் முன்வராததால் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:47 pm

ஆர். முருகன்

தருமபுரி வன்முறைச் சம்பவம் அச்சத்தால் விவசாயப் பணிகளைச் செய்ய கூலி ஆள்களும், விவசாயிகளும் முன்வராததால் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பூமிக்குள் புதைந்து சேதமடைந்தன.
 தருமபுரியை அடுத்துள்ள நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் நவ.7-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையால் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
 இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக செல்லன்கொட்டாய், வாணியம்பாடியன் கொட்டாய், கோணங்கி நாயக்கனஹள்ளி மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 17 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 142 பேர் கைது செய்யப்பட்டனர்.
 மேலும், சிலரைத் தேடி வருவதால் நவ.7-ஆம் தேதி இரவு கிராமத்தைவிட்டு வெளியேறிய ஆண்கள் யாரும் இதுவரை திரும்ப வரவில்லை. பெண்கள் மட்டும் குழந்தைகளுடன் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.
 மேலும், விவசாயக் கூலி வேலைக்கு வரும் பெண்களும் இந்தக் கிராமங்களில் வேலைக்கு வர அச்சப்படுகின்றனர். இதன்காரணமாக இந்தக் கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ளன அனைத்துப் பயிர்களும் சேதமடைந்து வருகின்றன.
 குறிப்பாக செல்லன்கொட்டாய், வாணியம்பாடியான் கொட்டாய் ஆகிய இரு கிராமங்களில் மட்டும் 40 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை சேதமடைந்தன. அறுவடைக்குத் தயாரான நிலக்கடலைகளை மண்ணில் ஈரப்பதம் உள்ள நிலையிலேயே பிடுங்கினால் மட்டுமே மகசூல் கிடைக்கும். ஆனால், ஒரு மாதமாக பராமரிப்பின்றி, தண்ணீர் இல்லாமல் நிலக்கடலை தோட்டங்கள் வறண்டு விட்டன. இதன்காரணமாக, மண்ணுக்குள்ளேயே அவை புதைந்துவிட்டன.
 பூமிக்கு மேலே பச்சை வண்ணத்தில் இருந்த நிலக்கடலைச் செடிகளும் கருகி மக்கிவிட்டதால் செடி எது, களை எது என்பதே தெரியவில்லை. இதனால், நிலத்தை மண்வெட்டியால் தோண்டி ஏதாவது நிலக்கடலை மிச்சமிருக்கிறதா எனத் தேடும் வேலைதான் இப்போது நடைபெறுகிறது.
 இதற்கான கூலியும் இருமடங்காக உள்ளது. இதனால், பலரும் நிலத்திலேயே புதைந்து உரமாகட்டும் என அப்படியே விட்டுவிட்டனர்.
 40 ஏக்கரில் பயிரிடவும், களை எடுக்கவும், உரம், பூச்சிக் கொல்லி மருந்து, கூலி ஆள்கள் செலவு என பல லட்சம் செய்த செலவு அனைத்தும் வீணாகிவிட்டது என இந்தப் பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர்.
 இதுதொடர்பாக, வாணியம்பாடியன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி கூறியது:
 சுமார் 3 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டிருந்தோம். நவம்பர் முதல் வாரத்திலேயே அறுவடை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், வன்முறையால் கிராமத்தைவிட்டே அனைவரும் காலி செய்துவிட்டனர். பராமரிப்பு இல்லாமல் நிலக்கடலை அனைத்தும் வீணாகிவிட்டது. நிலக்கடலை மட்டுமல்லமாது மஞ்சள், துவரை உள்ளிட்ட பயிர்களிலும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.
 செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி பழனியம்மாள் கூறியது:
 வன்முறைச் சம்பவம் நடைபெற்று ஒரு மாதமாகியும் இன்னும் கிராமங்களில் ஆண்கள் யாரும் இல்லை. கூலி வேலைக்குச் செல்லும் பெண்களும் அச்சத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இப்போதுதான் ஒரு சிலர் வேலைக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், விளைநிலங்கள் பராமரிப்பு இல்லாமல் ஒரு மாதமாக விட்டுவிட்டதால் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலையும் இருமடங்காக உள்ளது. ஒருதரப்புக்கு மட்டுமே நிவாரணத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் மாவட்ட நிர்வாகம் மற்றொரு தரப்பினரை கவனிக்காமல் இருப்பது அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.