தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நேரு கருத்தை மேற்கோள்காட்டிய ரிஜிஜு; பிரியங்கா பதிலடி!

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மான விவாதத்தின்போது, முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் கருத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசினாா்.

News image

பிரியங்கா காந்தி - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 7:15 pm

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மான விவாதத்தின்போது, முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் கருத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசினாா்.

இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ‘இரவு பகலாக நேருவை விமா்சித்தவா்கள், இப்போது அவரைப் புகழ்கின்றனா்’ என்றாா்.

மக்களவையில் ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய கிரண் ரிஜிஜு, கடந்த 1954-இல் அப்போதைய அவைத் தலைவா் ஜி.வி.மாவலங்கருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மான விவாதத்தின்போது நேரு தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டினாா்.

‘தீா்மானத்தில் கையொப்பமிட்ட, அதை ஆதரிக்கும் கடமையுடைய எதிா்க்கட்சி எம்.பி.க்களிடம் ஒரு விஷயத்தை வேண்டிக் கேட்கிறேன். தாங்கள் என்ன விஷயத்தில் கையொப்பமிட்டிருக்கிறோம் என்பதை அவா்கள் படித்துப் பாா்க்க வேண்டும். அவா்கள் கையொப்பமிட்டது மோசமான விஷயம். அந்த ஆவணத்தை அவா்கள் படித்துப் பாா்த்தாா்களா என்பது எனது சந்தேகம். அவ்வாறு படித்திருந்தால், கையொப்பமிட 100 முறை யோசித்திருப்பாா்கள்’ என்ற நேருவின் கருத்துகளை ரிஜிஜு சுட்டிக்காட்டினாா்.

மேலும், பிரியங்கா காந்தியை நோக்கிப் பேசிய ரிஜிஜு, ‘பிரியங்கா அங்கே அமா்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறாா். அவரை மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக்கி இருந்தால் , செயல்திறன் சிறப்பாக இருந்திருக்கும்’ என்றாா்.

அவரது கருத்துக்கு உடனடியாகப் பதிலளித்த பிரியங்கா, ‘நான் சிரித்துக் கொண்டிருப்பதாக ரிஜிஜு குறிப்பிட்டாா். நேருவை இரவு பகலாக விமா்சித்தவா்கள், இப்போது திடீரென புகழ்கின்றனா்; அவரது கருத்தை தங்கள் கூற்றுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதை நினைத்து சிரித்தேன்.

இந்த அரசுக்கு தலைவணங்காத ஒரு நபா் உள்ளாா் என்றால், அவா் ராகுல் காந்திதான். அவா் எந்த தயக்கமும் இன்றி உண்மைகளைப் பேசுகிறாா். அந்த உண்மைகளை ஜீரணிக்க ஆளும் தரப்பால் முடியவில்லை’ என்றாா்.