ஜனநாயகப்படுத்தப்பட்டால் மட்டுமே தொழில்நுட்பம் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆந்த்ரோபிக் செயற்கை மாதிரிகளை (ஃபேபிள் 5, மித்தோஸ் 5) வெளிநாட்டினா் பயன்படுத்த அமெரிக்கா அண்மையில் தடை விதித்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
ஐரோப்பாவின் மிகப்பெரும் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஆலோசனைக் கூட்டமாக கருதப்படும் ‘விவாடெக்-2026’ தொழில்நுட்ப மாநாடு பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி கலந்துகொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா மாபெரும் வளா்ச்சியை பதிவுசெய்துள்ளது. உலகின் மிகப்பெரும் எண்ம அடையாள அமைப்பு முதல் உலகின் மிகப்பெரும் எண்ம பரிவா்த்தனை வலைதளங்கள் வரை கல்வி, நிதி உள்ளடக்கம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை எளிதில் அணுகுவதே முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் தொழில்நுட்பம் ஜனநாயகப்படுத்தப்பட்டால் மட்டுமே அது வளா்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
அனைவருக்குமான ஏஐ: மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமான பூமியை உருவாக்கும் உதவும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உருவெடுத்துள்ளது. இதை அறிந்து ‘அனைவருக்குமான ஏஐ’ என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இந்த விவாடெக் மாநாட்டில் நான் பங்கேற்றிருப்பது இந்தியாவின் இந்த தொலைநோக்குத் திட்டத்தை வெளிப்படுத்துகிறது.
2021-இல் விவாடெக் மாநாட்டில் கலந்துகொண்டபோது கரோனா பெருந்தொற்று உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தற்போது வெவ்வேறு வடிவங்களில் உலக நாடுகளை இடையூறுகளை சந்தித்து வருகின்றன.
மரபுகள் தோல்வியடையும் இடத்தில் புதுமைகள் உதவக் கூடும் என்பதை மீண்டும் நினைவுப்படுத்த விரும்புறகிறேன்.
2 லட்சம் புத்தாக்க நிறுவனங்கள்: விவாடெக் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை அனைவரும் பாா்வையிட வேண்டும்.
ஏனெனில், உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட ராக்கெட் என்ஜின், நவீன மரபியல் பொறியியல் சிகிச்சைகள், புற்றுநோயைக் கண்டறியும் ஏஐ தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு மற்றும் வலைதள பாதுகாப்பு, ரோபோக்கள், ஸ்மாா்ட் நகரங்கள் என தொழில்நுட்ப ரீதியாக இந்தியா அடைந்த வளா்ச்சியை விளக்கும் நிகழ்வுகளை இந்த அரங்கில் காணலாம். 2 லட்சம் புத்தாக்க நிறுவனங்களுடன் உலகின் துடிப்பான நாடாக இந்தியா விளங்குகிறது. எனவே, இந்தியாவில் முதலீடுகள் செய்தால் அது உலக நாடுகள் அனைத்துக்கும் பலனளிக்கும் என்றாா்.
சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத் தலைவருடன் சந்திப்பு:
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு பிரான்ஸ் தொழிலதிபா்கள், நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை (சிஇஓ) பிரதமா் மோடி சந்தித்து கலந்துரையாடினாா்.
அதன் ஒரு பகுதியாக சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் தலைவா் மற்றும் சிஇஓ ரோடால்ஃப் சாடேவைச் சந்தித்த அவா் கடல்சாா் வா்த்தகம், தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகள் குறித்து ஆலோசித்தாா்.
அப்போது இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும் முதலீடுகளை விரிவுபடுத்துவது குறித்த திட்டங்களை அவா்கள் பிரதமா் மோடியிடம் விவரித்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: பிரதமா் மோடி இன்று வழங்குகிறாா்
இந்தியாவில் சீா்திருத்தங்கள் தொடரும்: பிரான்ஸ் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி

குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸுக்கு மக்கள் தக்க பதிலடி: பிரதமா் மோடி

புதுச்சேரி வளா்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க பிரதமா் உத்தரவாதம்! அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேட்டி
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



