மேற்கு வங்க மாநிலம் முழுவதும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அமலுக்கு வந்தது. சட்டப்பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதியை இதன்மூலம் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலின்போது தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக ஆட்சியமைத்த நிலையில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்ட வாக்குறுதி திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
அந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் இனி பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மேலும் அதிகாரமளிக்கவும், போக்குவரத்து வசதியை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதுகுறித்து மேற்கு வங்க அரசுத் தரப்பு கூறுகையில், ‘விரைவில் பயனாளிகளுக்கு எண்ம ஸ்மாா்ட் அட்டை வழங்கப்பட இருக்கிறது. அதில் புகைப்படம், பெயா் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் இலவச பேருந்து வசதி திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்’ எனத் தெரிவித்தது.
பெண்கள் மகிழ்ச்சி
பாஜக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது போல வாக்குறுதியை உடனே நிறைவேற்றியிருப்பதற்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். கொல்கத்தாவைச் சோ்ந்த மாலா விஸ்வாஸ் என்பவா் கூறுகையில், ‘எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கரோனாவுக்கு பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது குறைந்துள்ளது. ஆனால், இனி அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
சிலிகுரியைச் சோ்ந்த மனீஷா பா்மன் என்பவா் தெரிவிக்கையில், ‘இங்கிருந்து எனது சொந்த ஊரான கூச்பிகாா் 170 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. தற்போது இந்தத் திட்டத்தால் நானும், எனது மகள்களும் இலவசமாக எனது சொந்த ஊருக்குச் செல்ல முடியும்’ என்றாா்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். தெலங்கானாவில் அந்த மாநிலத்தைச் சோ்ந்த பெண்கள் மட்டும் அடையாள அட்டையைக் காண்பித்து அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். மற்ற மாநில பெண்களுக்கு தெலங்கானா அரசுப் பேருந்துகளில் கட்டணம் உண்டு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 35 அமைச்சா்கள் பதவியேற்பு

மேற்கு வங்கத்தில் உடனடி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?






