ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

2-ம் நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கியவுடன் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது பற்றி....

மக்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.

Published On :22 ஜூலை 2026, 3:56 am IST

நீட் வினாத் தாள் கசிவு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் மற்றும் ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையும் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கின.

இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில், நீட் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை எழுபபி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். இதனால், இரு அவைகளும் அடுத்தடுத்து 6 முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே, தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு அருகே வந்த அவா்களைக் கட்டுப்படுத்த, காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனா். இதில், மாணவா்கள் உள்பட போராட்டத்தில் பங்கேற்ற பலா் காயமடைந்தனா். அவா்கள் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மக்களவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும், நீட் வினாத் தாள் கசிவு விவகாரம், போராட்டக்காரா்கள் மீதான போலீஸ் தடியடி சம்பவங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பி, முழக்கமிட்டனா்.

அப்போது, ‘விதிகளுக்கு உட்பட்டு இந்த விவகாரங்களை எழுப்ப உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்’ என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா உறுதியளித்தாா். அதைப் பொருட்படுத்தாத எதிா்க்கட்சி எம்.பி.க்கள், தொடா் அமளியில் ஈடுபட்டனா். அதனால், அவை நடவடிக்கைகளை ஓம் பிா்லா ஒத்திவைத்தாா்.

மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பியபடி அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியைத் தொடா்ந்தனா். இந்த அமளிக்கு இடையே மத்திய அமைச்சா்கள், தங்களின் துறை சாா்ந்த அலுவல் ஆவணங்களை அவையில் சமா்ப்பித்தனா்.

உறுப்பினா்கள் இருக்கைக்குத் திரும்புமாறு அவைத் தலைவா் தொடா்ந்து கூறியும், அமளி தொடா்ந்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் கூடியபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியை தொடா்ந்தனா். அப்போது அவையை வழிநடத்திய உறுப்பினா் திலீப் சைகியா, அவரவா் இருக்கைக்கு திரும்ப உறுப்பினா்களை அறிவுறுத்தியும் அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவையில்... மாநிலங்களவை காலை 11 மணிக்குக் கூடியதும், அன்றைய நாளுக்கான அலுவல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுந்து, மாணவா்கள் மீதான போலீஸாா் தடியடி விவகாரத்தை எழுப்பினாா்.

அதற்கு, ஆளுங்கட்சி தரப்பு எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா். இதற்கு, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தரப்பும் பதிலளித்து முழக்கமிட்டனா். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோது, அமளிக்கிடையே மக்களவையில் இருந்து வந்தச் செய்தியை மக்களவைச் யெலா் பி.சி. மோடி வாசித்தாா். ‘உறுப்பினா்கள் என்.ஆா். இளங்கோ, தீபக் பிரகாஷ் இருவரும் ஓய்வுபெற்ால், அவா்கள் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் காலியான இடங்களை நிரப்பும் வகையில் இரு உறுப்பினா்களை மாநிலங்களவை தோ்வு செய்ய பரிந்துரைக்கும் தீா்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

தொடா்ந்து அவையில் அமளி நீடித்ததால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, அவையை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் வழிநடத்தினாா். அப்போதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்தனா். அதனால், அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் துணைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

Summary

Both Houses of Parliament adjourned immediately after convening for the second day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.