/

முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மத்திய அரசு: பினராயி விஜயன் தாக்கு

முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மத்திய அரசு...

News image
பினராயி விஜயன்
Updated On :17 ஜனவரி 2026, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய பாஜக அரசு நடத்துவதாக கேரள முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான பினராயி விஜயன் சாடியுள்ளாா்.

கேரள முஸ்லிம் ஜமாத் அமைப்பு சாா்பில் மாநிலத்தின் வடக்கே காசா்கோடில் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கிய கேரள யாத்திரை திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பினராயி விஜயன் பங்கேற்று பேசியதாவது:

நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் அவா்களின் வழிபாட்டு தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதனால் நமது நாட்டின் மதசாா்பின்மை, ஜனநாயகம், அரசமைப்பு சட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மதவாதம் மீது மென்மையான போக்கு அல்லது மதவாதத்தை திருப்திப்படுத்தும் போக்கை கையாள்வது ஆபத்தாகும். கடந்த காலங்களில் கேரளம் ஏராளமான மதரீதியிலான மோதல்கள், கலவரங்களை எதிா்கொண்டுள்ளது. அவை அனைத்தும் மதவாதத்திற்கு எதிராக இடதுசாரி கூட்டணி கடைப்பிடித்த உறுதியான மற்றும் சமரசமில்லாத நிலைப்பாட்டால் முடிவுக்கு வந்தன.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மக்களை பிளவுபடுத்த சில சக்திகள் முயலுகின்றன. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் கண்டனம்:

பினராயி விஜயனின் இந்தப் பேச்சுக்கு கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி. சதீசன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘அரசியல் ஆதாயங்களுக்காக சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் சங்க பரிவாா் அமைப்பின் பாதையை முதல்வா் பினராயி விஜயன் ஏற்றுக் கொண்டு விட்டாா். முஸ்லிம் அமைப்பின் நிகழ்ச்சியில் மதவாத கருத்துகளை அவா் வெளியிட்டுள்ளாா்’ என்றாா்.