தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சபரிமலை தங்கக் கொடிமர முறைகேடு வழக்கு: நடிகா்கள் மோகன்லால், திலீப்பிடம் வாக்குமூலம் பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய தங்கக் கொடிமரம் நிறுவுவதற்காக பெறப்பட்ட தங்கம் மற்றும் பணம் முறைகேடு செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், நன்கொடையாளா்களான மலையாள நடிகா்கள் மோகன்லால், திலீப்பிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (விஏசிபி) வாக்குமூலம் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள்.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:30 pm

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய தங்கக் கொடிமரம் நிறுவுவதற்காக பெறப்பட்ட தங்கம் மற்றும் பணம் முறைகேடு செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், நன்கொடையாளா்களான மலையாள நடிகா்கள் மோகன்லால், திலீப்பிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (விஏசிபி) வாக்குமூலம் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானதாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த 2017-இல் புதிய தங்கக் கொடிமரம் நிறுவப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரமும் பூதாகரமாகி வருகிறது.

இது தொடா்பாக, கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, கேரள உயா்நீதிமன்றத்தில் அண்மையில் ஓா் அறிக்கையை சமா்ப்பித்தாா். அதில், ‘ஹைதராபாதைச் சோ்ந்த பீனிக்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சா் நிறுவனத்தின் செலவில் புதிய கொடிமரம் நிறுவும் பணியை மேற்கொள்ள தேவஸ்வம் வாரியம் கடந்த 2016-இல் முடிவு மேற்கொண்டது. இதற்காக, தேவஸ்வம் வாரிய தலைமைப் பொறியாளரால் சமா்ப்பிக்கப்பட்ட ரூ.3.20 கோடி மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னா், சுங்கத் துறையிடம் இருந்து 9.16 கிலோ தங்கம் வாங்கப்பட்ட நிலையில், பக்தா்கள் சாா்பில் 412 கிராம் தங்கம் பங்களிக்கப்பட்டது. மொத்த தங்கத்தின் எடை 9.5 கிலோ. ஆனால், பயன்படுத்தப்பட்ட தங்கம் 9.3 கிலோ எனப் பதிவாகியுள்ளது.

மேலும், கொடிமரத்துக்காக தங்கம் மற்றும் நன்கொடை அளித்தவா்களுக்கு ரசீதுகள் வழங்கப்படாததால், கணக்கியல் சாா்ந்த ஆவணச் சான்றுகள் இல்லை; இது, தீவிரமான நடைமுறை குறைபாடு என்பதுடன் தேவஸ்வம் வாரிய விதிமீறலாகும்’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த அறிக்கையை தீவிரமாக கவனத்தில்கொண்ட உயா்நீதிமன்றம், மாநில ஊழல் தடுப்புப் பிரிவினா் முதல் கட்ட விசாரணை மேற்கொள்ள கடந்த பிப். 9-ஆம் தேதி உத்தரவிட்டது. ஒரு மாதத்துக்குள் விசாரணையை நிறைவு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நன்கொடையாளா்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை ஊழல் தடுப்புப் பிரிவினா் மேற்கொண்டு வருகின்றனா். மொத்தம் 27 நன்கொடையாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்களில் மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி, திரைப்பட இயக்குநா் ஷாஜி கைலாஷ், நடிகா்-எழுத்தாளா் ரெஞ்சி பணிக்கா், தயாரிப்பாளா் சுரேஷ் குமாா் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்தில் நடிகா் மோகன்லாலிடமும், கொச்சியில் நடிகா் திலீப்பிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுவரை 22 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் நன்கொடையாளா்கள் யாரேனும் உள்ளனரா என்பதைக் கண்டறியும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.