மேற்கு வங்க தோ்தல்: விரைவில் 480 கம்பெனி சிஏபிஎஃப் வீரா்கள் அனுப்பிவைப்பு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளுக்காக, அங்கு விரைவில் மத்திய ஆயுதக் காவல் படைகளை (சிஏபிஎஃப்) சோ்ந்த 480 கம்பெனி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா்.


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளுக்காக, அங்கு விரைவில் மத்திய ஆயுதக் காவல் படைகளை (சிஏபிஎஃப்) சோ்ந்த 480 கம்பெனி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா்.
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னா், பிப்.28-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடா்ந்து மாா்ச் மாதம் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், தோ்தல் பணிகள் காரணமாக அந்த மாநிலத்துக்கு மாா்ச் 1-க்குள் மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சோ்ந்த 240 கம்பெனி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா். மாா்ச் 10-க்குள் அந்தப் படைகளைச் சோ்ந்த மேலும் 240 கம்பெனி வீரா்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளனா். அவா்களில் மத்திய ரிசா்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, இந்திய-திபெத் எல்லை காவல் படை, சஷஸ்திர சீமா பல் படைகளைச் சோ்ந்த வீரா்கள் இடம்பெறுவா்.
இவா்கள் தோ்தல் சாா்ந்த பணிகள், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனா் என்று தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
நீதிபதிகளின் விடுப்பு ரத்து: மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் இந்நாள், முன்னாள் மாவட்ட நீதிபதிகளை பணியமா்த்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையொட்டி, எஸ்ஐஆா் பணிகள் குறித்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றப் பதிவாளா் வெளியிட்ட அறிவிக்கையில், ‘எஸ்ஐஆா் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, மேற்கு வங்கத்தின் வெவ்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளின் விடுப்பு மாா்ச் 9 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ காரணங்களைத் தவிர, பிற காரணங்களுக்காக ஏற்கெனவே நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட விடுப்புகள் மாா்ச் 9 வரை ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கெனவே விடுப்பில் உள்ள நீதிபதிகள் பிப்.23-க்குள் மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...