/

பதற்றத்தில் உலக நாடுகள்... வளர்ச்சியை நோக்கி இந்தியா : பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வணிக ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என பிரதமர் விமர்சனம்.

News image
நரேந்திர மோடி - கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 5:20 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உலகளவில் நிலவும் பதற்றம் மற்றும் கடின சூழலிலும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் பிரகாசமான இடத்தில் இந்தியா உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சி நிர்வாகங்களால் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் மிகப்பெரிய அளவிலான இடைவெளிகள் இருந்ததாகவும், அதனை சீர்செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொருளாதார நிர்வாகத் திறன் குறைபாட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எந்தவொரு வணிக ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை, ஆனால், தேசிய ஜனநாயக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆங்கில ஊடகமான பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த நேர்காணலில் பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

இதில், 2026 - 27 பட்ஜெட் தாக்கல் மற்றும் சுயசார்பு இந்தியாவுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது,

2026 - 27 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டானது நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது. நாட்டிற்கான சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வேகமாக மாறிவரும் உலகில் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான வேகம் நமது ஆட்சியின் அடையாளம்.

நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் உள்கட்டமைப்புகள் மற்றும் மூலதன முதலீடுகளில் நாம் கவனம் செலுத்தி வருவதை, அதிக மூலதன செலவு பிரதிபலிக்கிறது.

2027 ஆம் நிதியாண்டுக்கான மூலதனச் செலவு ரூ. 12.2 லட்சம் கோடி. 2013ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட இது 5 மடங்கு அதிகமாகும். குறுகிய கால வளர்ச்சியை விட நீண்ட கால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலான உற்பத்தி, வேலைவாய்ப்புகள், பொருளாதார திறன் போன்றவற்றுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

உடைந்த மற்றும் காலாவதியான பொருளாதாரத்திற்கு இனி இடமில்லை. அது சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதில் உதவாது. அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக எங்கள் வேகத்திற்கும் அளவுக்கும் ஈடுகொடுக்கும்

நாட்டிலுள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படவுள்ளது. விமானங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 7 அதிவேக ரயில் முனையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. பயண மற்றும் தளவாடச் செலவுகளைக் குறைக்கும் வகையில் ரயில்வே துறை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

கடந்த தலைமுறையில் இருந்ததை விட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு 500 மடங்கு அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.