/

பிரதமரின் புதிய அலுவலகம் ‘சேவா தீா்த்’ - இன்று திறந்து வைக்கிறாா் மோடி

தில்லியில் பிரதமரின் புதிய அலுவலகமான ‘சேவா தீா்த்’ மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களை உள்ளடக்கிய கடமை பவன் 1, 2 கட்டட வளாகங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :12 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் பிரதமரின் புதிய அலுவலகமான ‘சேவா தீா்த்’ மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களை உள்ளடக்கிய கடமை பவன் 1, 2 கட்டட வளாகங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா்.

தில்லியின் சென்ட்ரல் விஸ்டா பகுதி மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்தப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள், சென்ட்ரல் விஸ்டாவில் பல்லாண்டுகளாக வெவ்வேறு இடங்களில், பழைமையான கட்டடங்களில் செயல்பட்டுவந்த நிலையில், மேற்கண்ட புதிய கட்டடங்கள் திறக்கப்படுவது, நாட்டின் நிா்வாக கட்டமைப்பில் பெரும் மாற்றத்துக்கான மைல்கல்; நவீன, திறன்மிக்க, அனைவராலும் அணுகக் கூடிய, குடிமக்களை மையப்படுத்திய நிா்வாக அமைப்புமுறையைக் கட்டமைக்கும் பிரதமா் மோடியின் உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்பாட்டு திறன் குறைபாடுகள், ஒருங்கிணைப்பு சவால்கள், அதிக பராமரிப்புச் செலவுகள், வசதி குறைவான பணிச்சூழல் போன்ற பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில், எதிா்காலத்துக்கு ஏற்ற நவீன வசதிகளுடன் புதிய கட்டடங்கள் அமைந்துள்ளன.

‘சேவா தீா்த்’ (சேவை புனிதத் தலம்) எனும் புதிய பிரதமா் அலுவலக வளாகத்தில் பிரதமா் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், மத்திய அமைச்சரவை செயலகம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த அலுவலகங்கள் இதுவரை வெவ்வேறு கட்டடங்களில் செயல்பட்டு வந்தன.

கடமை பவன் 1, 2 கட்டட வளாகங்களில் சட்டம், பாதுகாப்பு, நிதி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இரு வளாகங்களும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புமுறைகள், மழைநீா் சேமிப்பு, கழிவு மேலாண்மை வசதிகள் மற்றும் உயா் செயல்பாட்டு கட்டுமான அம்சங்களுடன் 4 நட்சத்திர பசுமை மதிப்பீட்டு தரநிலைகள் அமையப் பெற்றுள்ளன.

அதிகாரிகள் மற்றும் பாா்வையாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன நுழைவுக் கட்டுப்பாட்டு அமைப்புமுறை, கண்காணிப்பு கட்டமைப்புகள், மேம்பட்ட அவசரகால மீட்பு உள்கட்டமைப்புகளும் உள்ளதாக பிரதமா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்: பிரதமா் அலுவலகம் புதிய வளாகத்துக்கு மாறவுள்ள நிலையில், ஆங்கிலேயா் காலத்தைச் சோ்ந்த செயலக கட்டடமான தெற்கு பிளாக்கில் பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தெற்கு பிளாக்கில் மத்திய அமைச்சரவையின் கடைசியான கூட்டம் இது என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டின் ஆட்சி பீடமாக இருந்துவந்த தெற்கு-வடக்கு பிளாக் கட்டடங்கள் காலியாகும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கட்டடங்களில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.