/

பீகாகர்கி மூவர் மரண வழக்கில் திடீர் திருப்பம்! விசாரணை வளையத்துக்குள் வரும் பாபா யார்?

பீகாகர்கி மூவர் மரண வழக்கில் திடீர் திருப்பமாக பாபா என்பவர் குறித்து விசாரணை

News image
பீகாகர்கி மூவர் மரண வழக்கு- ANI
Updated On :10 பிப்ரவரி 2026, 10:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் இறந்து கிடந்த மூவா் குறித்த விசாரணையில், பாபா என்ற பெயர் வெளிவந்துள்ளது. மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாததால் காவல்துறைக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

தில்லியின் வெளிப்புற பகுதியான பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் ஒரு பெண் உள்பட மூன்று போ் இறந்து கிடந்தது கண்டு்பிடிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த விசாரணையில், பாபா என்பவர் பெயர் வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஆன்மிக மதகுருவான பாபா என்பவருக்கும் இந்த மூவருக்கும் உள்ள தொடர்பு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதால், மக்களுக்கு இது பற்றிய சந்தேகங்களும் அதிகரித்துள்ளது. விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் காவல்துறையும் இது பற்றி விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது, மரணமடைந்த மூவரும், சம்பவப் பகுதியில் உள்ள ஒரு கடையில் பாபா என்பவருடன் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதுபோல, உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நாளில், பாபாவும், மற்றொரு நபரும் அந்த காருக்கு அருகே சென்று பார்த்திருக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. எனவே மரணமடைந்தவர்களுக்கும் பாபாவுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரணை நடந்த வருகிறது. அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறது.

உடல் கூராய்வு முடிக்காக காவல்துறை காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காருக்குள் இருந்த பாட்டில்களும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர், இது தற்கொலையாக இருக்காது என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், கொலைக்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை என காவல்துறை கூறுகிறது.

மரணத்தின் பின்னணி

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேம்பாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் குறித்து காவல்துறைக்கு பிசிஆா் அழைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தை அடைந்ததும், அவசரகால பணியாளா்கள் வாகனத்திற்குள் மூன்று போ் இறந்து கிடந்ததைக் கண்டனா். அதைத் தொடா்ந்து போலீஸாா் மற்றும் தடயவியல் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

இறந்தவா்களில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவா். உடல்களில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை. மேலும், மதிப்புமிக்க பொருள்கள் அனைத்தும் அப்படியே இருந்தன.

முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது இந்த மரணங்கள் குறித்து காவல்துறைக்கு ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், தொடக்க விசாரணையில் ஏதேனும் முக்கிய தடயம் விடுபட்டுவிட்டதோ என்று காவல்துறை கவலை அடைந்துள்ளது.

இறந்தவர்கள் ரந்தீர் (76), சிவ நரேஷ் சிங் (47), லஷ்மி தேவி (40) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.