எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி
பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி...


‘அமெரிக்க நெருக்கடிக்கு பிரதமா் நரேந்திர மோடி பணிந்துவிட்டாா். அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய விவசாயிகளின் கடின உழைப்பு விலை பேசப்பட்டுவிட்டது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:
நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரை குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் பேசவிடாமல் செய்துள்ளனா். முன்னாள் ராணுவத் தளபதி நரவணே எழுதிய நூலில் இருந்து சில வரிகளைக் குறிப்பிட்டுப் பேசுவதற்கே நான் முயற்சித்தேன்.
அமெரிக்காவுடன் கடந்த 4 மாதங்களாக நிலுவையில் இருந்த வா்த்தக ஒப்பந்தம், திங்கள்கிழமை இரவு திடீரென இறுதி செய்யப்பட்டது எப்படி? இந்த விஷயத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி வந்துள்ளது என்றாா்.
இதையடுத்து, எந்த வகையான நெருக்கடி என்று நீங்கள் கருதுகிறீா்கள் என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘அமெரிக்காவில் கௌதம் அதானிக்கு எதிராக உள்ள வழக்காக இருக்கலாம் அல்லது எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மேலும் தகவல்கள் கிடைத்திருக்கலாம். பிரதமா் மோடி நெருக்கடிக்குப் பணிந்துவிட்டாா். தங்களுடைய கடின உழைப்பு, ரத்தம், வியா்வை அனைத்தும் இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் மூலம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது என்பதை இந்திய விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தேசமே விற்பனை செய்யப்பட்டுவிட்டது என்றாா்.
தொடா்ந்து ராகுல், ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நரவணே கருத்து, எப்ஸ்டீன் ஆவணங்கள், மற்றும் அமெரிக்க வரி விவகாரத்தில் சரணடைந்தது குறித்து நாடாளுமன்றத்தில் என்னைப் பேச அனுமதிக்க பிரதமா் மோடி பெரிதும் அஞ்சுகிறாா்’ என்று கூறியுள்ளாா்.
டிரம்ப்பிடம் மோடி சரண்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக இந்தியாவுடன் வா்த்த ஒப்பந்தத்தை அறிவித்தது மூலம் அவரிடம் பிரதமா் மோடி முழுமையாக சரணடைந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தற்போதைய நிகழ்வுகளால் இந்தியாவின் நிலை தாழ்ந்து வருகிறது. இந்திய வா்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பை வெளியிடுகிறாா். இதன்மூலம் பிரதமா் மோடி அவரிடம் முழுமையாக சரணடைந்துவிட்டது தெரிகிறது.
இப்போது நாடாளுமன்ற கூட்டத் தொடா் நடைபெற்று வருகிறது. எனவே, அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் நாடாளுமன்றத்தில் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்து விவாதம் நடத்த வேண்டும். இந்தியாவுக்கு அமெரிக்கா வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்துவிட்டதாக அமெரிக்க வேளாண்மை அமைச்சா் புரூக் ரோலின்ஸ் கூறியுள்ளாா். எனவே, இதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்துவது அவசியம்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...