/

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 2 வெளிநாட்டவர் வெளியேற நோட்டீஸ்...

News image
கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 7:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பிரிட்டனைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அஜ்மீர் மாவட்டத்தின் புஷ்கரின் சில இடங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக, கடந்த ஜன.21 அன்று காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் புஷ்கரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியது பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான தீ (வயது 36) மற்றும் அனுஷி எம்மா கிரிஸ்டீன் (36) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இருவரையும் பிடித்த காவல் துறை அதிகாரிகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசா விதிமுறைகளை மீறி அவர்கள் இந்தியாவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, பிரிட்டனைச் சேர்ந்த இருவரும் இந்தியாவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டு குடியேற்ற அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் புஷ்கரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் அதிகாரிகள் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியும் புகாரளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.