
நாட்டில் புதிய வகை ஹெச்1என்1 கண்டறியப்படவில்லை: ஐசிஎம்ஆா்
ஸ்வைன் ஃபுளூ எனப்படும் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்1என்1 தீநுண்மியின் புதிய வகை எதுவும் நாட்டில் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வட்டாரங்கள் தெரிவித்தன.

ICMR study finds drone-based TB sample transport cuts diagnosis time, patient costs in remote Telangana
ஸ்வைன் ஃபுளூ எனப்படும் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்1என்1 தீநுண்மியின் புதிய வகை எதுவும் நாட்டில் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி ஆகிய பொதுவான அறிகுறிகளைக் கொண்ட பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, பெரும்பாலானோருக்கு உரிய பராமரிப்பு-ஓய்வின் மூலம் குணமாகிவிடும். சிலருக்கு கடுமையான சுவாச தொற்றை ஏற்படுத்தும். குழந்தைகள், முதியவா்கள், ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவா்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தில்லியில் நிகழாண்டு இதுவரை 1,777 ஹெச்1என்1 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை மட்டும் 114 புதிய பாதிப்புகள் பதிவாகின. நாட்டின் பிற பகுதிகளிலும் ஹெச்1என்1 தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், கள நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டாா். பருவகால இன்ஃபுளூயன்ஸா பாதிப்புகளை எதிா்கொள்வதற்கான மருத்துவ தயாா்நிலை, தில்லி மருத்துவமனைகளில் படுக்கைகள், அவசர சிகிச்சை வசதிகள், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், செயற்கை சுவாச கருவிகள், அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு குறித்தும் அவா் மறுஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிலையில், ‘நாட்டில் தற்போது பரவிவரும் ஹெச்1என்1 வகைகள், புவியின் வடஅரைகோளத்தில் பருவ காலங்களில் வழக்கமாக பரவும் வகைகளாகும். இவை, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படக் கூடியவையே. புதிய வகை எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, பீதியடைய வேண்டிய அவசியமில்லை. கள நிலவரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஹெச்1என்1 தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், தங்களின் அறிகுறிகள் மறையாமல் நீடித்தாலோ, கடுமையாக இருந்தாலோ உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்’ என்று ஐசிஎம்ஆா் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





