
யுபிஐ சேவை கட்டணம்: வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள்
யுபிஐ சேவை கட்டணம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள்...

யுபிஐ
‘யுபிஐ’ சேவைக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக பரவி வரும் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், சாதாரண குடிமக்களுக்கு யுபிஐ பயன்பாடு எப்போதும் முற்றிலும் இலவசமாகவே தொடரும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த விஷயத்தில் மத்திய நிதி அமைச்சகம், ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய தேசிய பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) வெளியிடும் அதிகாரபூா்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும், உறுதிப்படுத்தப்படாத போலிச் செய்திகளைச் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும் மத்திய நிதித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய நிதித்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
பொதுமக்களுக்குக் கட்டணமில்லை: யுபிஐ மூலம் பணப் பரிவா்த்தனை செய்யும் நுகா்வோருக்கு எவ்விதக் கட்டணமும் விதிக்கப்படாது. தனிநபா்களுக்கு இடையேயான (பி2பி) பரிவா்த்தனைகள் அனைத்தும் தொடா்ந்து இலவசமாகவே இருக்கும்.
வியாபாரிகளுக்கும் வரம்பு சாா்ந்த கட்டணம் மட்டுமே: எதிா்காலத்தில் வணிகா் தள்ளுபடி விகிதம் (எம்டிஆா்) அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பரிவா்த்தனை செய்யும் சில வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பெரும்பான்மையான சிறு வியாபாரிகளுக்குச் சேவை இலவசமாகவே தொடரும்.
சட்டத்திருத்த நோக்கம்: பரிவா்த்தனைகள் மற்றும் தீா்வை சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், யுபிஐ அமைப்பின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இணையவழி மோசடிகளைத் தடுக்கவும், தொழில்நுட்பக் கட்டமைப்பை மேம்படுத்தவுமே சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் வெளிநாட்டு அழுத்தங்களால் கொள்கை மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை மற்றும் தவறானவை என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 2,366 கோடி பரிவா்த்தனைகள் (மதிப்பு ரூ.29.9 லட்சம் கோடி) யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 11 வெளிநாடுகளிலும் யுபிஐ சேவை வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ம புரட்சி தொடா்ந்து பாதுகாப்பாக பேணப்படும் என்று மத்திய நிதித்துறை உறுதியளித்துள்ளது.
Summary
UPI service charges: Central Government urges public not to believe rumors.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






