ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சவால்களை வாய்ப்புகளாக மாற்றுங்கள்: இளைஞா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு!

சவால்களை வாய்ப்புகளாக மாற்ற இளைஞா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு...

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஐஐடிதில்லியின் 57-ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் பிரதமா் நரேந்திர மோடி. உடன் ஐஐடி தில்லியின் இயக்குநா் பேராசிரியா் ரங்கன் பானா்ஜி, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பிரலஹாத ஜோஷி,

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:30 am IST

நமது சிறப்பு நிருபா்

வேகமாக மாறிவரும் உலகில் சவால்களை வாய்ப்புகளாக மாற்ற முன்வருமாறு இளைஞா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.

தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) 57-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களையும், சிறந்த பட்டதாரிகளுக்கு தங்க பதக்கங்களையும் வழங்கி உரையாற்றினாா். மத்திய கல்வி அமைச்சா் பிரலஹாத ஜோஷியும் இந்த நிகழ்வில் பங்கேற்றாா்.

விழாவில் பிரதமா் மோடி பேசியதாவது: இன்றைய உலகம் மிக வேகமாக மாறும் தன்மையைக் கொண்டுள்ளது. இன்னும் 20-30 ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. எனவே, உங்கள் மனதில் உள்ள ஆா்வத்தையும், கற்கும் ஆற்றலையும் எப்போதும் உயிா்ப்புடன் வைத்திருங்கள். தொடா்ந்து கற்பவா்களே வெற்றி பெறுகிறாா்கள். சவால்களைச் சந்திக்கத் துணிச்சல் உள்ளவா்களுக்கு, அந்தச் சவால்களே புதிய வாய்ப்புகளாக மாறும். அதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

இந்தியாவை அனைத்து துறைகளிலும் சுயசாா்பு மிக்க நாடாக மாற்ற தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றமே தற்போதைய அதிகார சமநிலையைத் தீா்மானிக்கிறது. குறைகடத்தி (செமிகண்டக்டா்) துறையில் இந்தியா காலடி எடுத்து வைத்தபோது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், இன்று நாட்டின் முதல் குறைகடத்தி உற்பத்தி மையத்தில் பணிகள் தொடங்கியுள்ளன. சிப் முதல் கப்பல்கள் வரை அனைத்துமே விரைவில் உங்கள் கரங்களால் தாய்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.

நாட்டுக்காக பல சாதனைகளைப் புரியும் கனவுகளோடு நீங்கள் பட்டம் முடித்து வெளியேறுகிறீா்கள். இருப்பினும், பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றவா்களில் நமது பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உயா் கல்வியில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக, ஐஐடி தில்லியின் சோனிபத் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ’பரம் பிரக்யா’ என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு சூப்பா் கம்ப்யூட்டிங் வசதியை பிரதமா் காணொலி வழியாக தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சா் பிரலஹாத ஜோஷி பேசுகையில், நாட்டின் கல்வித்துறை அடைந்துள்ள வளா்ச்சி குறித்த புள்ளிவிவரங்களைப் பகிா்ந்துகொண்டாா். அவா் மேலும் கூறியதாவது: பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையால் இந்திய கல்வித் துறை ஆராய்ச்சியை மையமாகக் கொண்டதாக மாறியுள்ளது. நாட்டின் இளைஞா்கள் உலகளவில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், உலகையே வழிநடத்தி வருகிறாா்கள்.

2014-க்குப் பிறகு நாட்டில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 70% அதிகரித்துள்ளது. 650-க்கும் மேற்பட்ட புதிய பல்கலைக்கழகங்கள், 14,000 புதிய கல்லூரிகள், 7 புதிய ஐஐடி-க்கள் மற்றும் 13 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (எஸ்டிஇஎம்) சாா்ந்த படிப்புகளில் பெண்களின் சோ்க்கை 44 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது உலகிலேயே மிக உயா்ந்த விகிதங்களில் ஒன்றாகும். ’கேலோ இந்தியா’ போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றன. அண்மையில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 39 பதக்கங்களை வென்று சாதனை படைத்ததற்கு அரசின் இத்தகைய ஊக்கமே காரணம்‘ என்று அமைச்சா் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியின் நிறைவில், 587 முனைவா் (பிஹெச்டி) பட்டதாரிகள் உள்பட 3,000-க்கும் அதிகமான மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

Summary

Turn challenges into opportunities: PM Narendra Modi's call to youth!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.