மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

திரிணமூல் கோட்டையில் நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது

News image

மேற்கு வங்க தேர்தல் - ANI

Updated On :27 ஏப்ரல் 2026, 8:27 am

மேற்கு வங்க மாநிலத்தின் 142 தொகுதிகளுக்கு ஏப். 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்கான பிரசாரங்கள் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முக்கியத்துவம் பெறுவது ஏன் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர தீவிரம் காட்டிவரும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கடும் முயற்சிகளை செய்து வருகிறது. கிட்டத்தட்ட மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு இந்த தேர்தல் செய் அல்லது செத்துமடி என்பது போலத்தான்.

மொத்தம், 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப். 23-ஆம் தேதி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது.

இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், 8 மாவட்டங்களுக்கு உள்பட்ட 142 தொகுதிகள் அடங்கும், வடக்கு 24 பர்கனாஸ், தெற்கு 24 பர்கனாஸ், வடக்கு கொல்கத்தா, தெற்கு கொல்கத்தா, ஹௌரா, ஹூக்ளி, நாடியா, கிழக்கு பர்த்வான் போன்றவையும் அடங்கும்.

முதல் கட்டத் தேர்தலைவிட 2ஆம் கட்டத் தேர்தல்தான் மிக முக்கியம், ஏனெனில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகள் பலவும் மமதா பானர்ஜியின் கோட்டையாக விளங்குபவை.

அதாவது, 142 தொகுதிகளில் 124 தொகுதிகளில் திரிணமூல் கட்சியின் வெற்றிக்கொடிதான் பறக்கிறது. இது கிட்டத்தட்ட 86 சதவிகிதம்.

முதல்கட்டத் தேர்தலில் ஒருவேளை, பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைத்தாலும்கூட, இரண்டாம் கட்டத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளை கைப்பற்றுவது மிக மிக முக்கியம். ஏனென்றால், திரிணமூல் கட்சியின் விசுவாசிகளின் வாக்குகள் மாற வேண்டும்.

ஆட்சியமைக்க வேண்டும் என்றால், மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 148 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். முதல் தொகுதிகளில் அதிக இடங்களைப் பிடித்தாலும் இந்த நம்பரை அடைய முடியாது. அதாவது இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் குறைந்தது 45 முதல் 60 இடங்களை பாஜக கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் 148 என்ற எண் வசப்படும்.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆனிவேராக இருக்கும் தொகுதிகள்தான் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இவை, திரிணமூல் கட்சியின் வெற்றிக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவை. ஆனால், இந்தத் தொகுதிகளில் பாஜக, ஏனோ அடிப்படை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட முடியாமல் திணறி வருகிறது. ஆனால் இந்த முறை அதனை செய்துமுடித்துவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.

2026 தேர்தலில், பாஜக, மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரம் செய்து, மக்களின் பிரச்னைகளை பேசியிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, போதிய தொழிற்சாலைகள் இல்லாதது போன்றவற்றில் கவனம் செலுத்தி விடைகாணுவோம் என்று உறுதி அளித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வரும் திரிணமூல் தலைவருமான மமதா பானர்ஜி, இரண்டாயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியால் தோற்கடிக்கப்பட்டு, பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில், தற்போது 2026 தேர்தலில் தெற்கு கொல்கத்தாவுக்கு உள்பட்ட பவானிபூர் தொகுதியில் மமதா போட்டியிட, சொந்த தொகுதியில் முதல்வர் வேட்பாளரை வீழ்த்த வேண்டும் என்ற நோக்குடன் பாஜகவின் சுவேந்து அதிகாரியும் அங்கு களம்கண்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில், பாஜக, தன்னுடைய வெற்றியை உறுதி செய்ய அனைத்து வகையான முயற்சிகளையும் செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பாஜகவினர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் குருவாக இருந்த மமதா பானர்ஜிக்கு எதிராக களம் காணும் சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர். தற்போது பவானிபூர் தொகுதியில், இரண்டு முதல்வர் வேட்பாளர்களும் களம் கண்டிருப்பது, வாழ்வா? சாவா போட்டியாக உள்ளது. பல மாநில மக்கள் இங்கு வாழ்ந்து வருவதால் இந்த தொகுதியை குட்டி இந்தியா என்றழைப்பார்கள். பவானிபூர் மமதாவுக்கு கை கொடுக்குமா? மற்றுமொரு நந்திகிராமாக மாறுமா? என்பது மே 4 அன்றுதான் தெரியவரும்.

Summary

Why the 2nd phase of voting in Trinamool stronghold is important

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.