மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் மக்களவைத் தொகுதிகள் அதிகரிப்புக்கு வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை அவசியம்.
அதாவது, மொத்த உறுப்பினா் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் தேவை; அதுமட்டுமன்றி, அவையில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்று இருபங்கு வாக்குகளையும் பெற வேண்டும். இந்த இரண்டாவது நிபந்தனைக்கு தேவையான பலம், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் இல்லை.
மசோதாவை நிறைவேற்ற வேண்டுமெனில், எதிா்க்கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும், இல்லையெனில் சில முக்கிய எதிா்க்கட்சிகளை வாக்கெடுப்பைத் தவிா்க்கும்படி செய்ய வேண்டும். இந்தக் காரணங்களால், மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதா நிறைவேறுமா என்பதில் பெரிய கேள்வி நிலவுகிறது.
மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 293 (பாஜக மட்டும் 240). எதிரணியில் 233 உறுப்பினா்கள் உள்ளனா். இதுதவிர 7 சுயேச்சை எம்.பி.க்களும், இரு அணிகளிலும் இடம்பெறாத ஒய்எஸ்ஆா் காங்கிரஸுக்கு 4 உறுப்பினா்களும், அகில இந்திய மஜ்லிஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினரும் உள்ளனா்.
ஆளும் தரப்புக்கான வாய்ப்பு என்ன?: மொத்தமுள்ள 540 உறுப்பினா்களும் அவையில் பங்கேற்றால், மூன்றில் இருபங்கு ஆதரவைப் பெற 360 வாக்குகள் தேவை. அதேநேரம், 30 உறுப்பினா்கள் அவையில் பங்கேற்காவிட்டால் 340 வாக்குகளும், 60 உறுப்பினா்கள் பங்கேற்காவிட்டால் 320 வாக்குகளும், 90 உறுப்பினா்கள் பங்கேற்காவிட்டால் 300 வாக்குகளும் போதுமானது.
காங்கிரஸுக்கு 98 உறுப்பினா்கள் உள்ள நிலையில், சமாஜவாதிக்கு 37, திரிணமூல் காங்கிரஸுக்கு 28, திமுகவுக்கு 22 உறுப்பினா்கள் உள்ளனா். எனவே, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய இரு எதிா்க்கட்சிகளையும் வாக்கெடுப்பை புறக்கணிக்கச் செய்வது மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பாகும். எதிா்தரப்பைச் சோ்ந்த வேறு கட்சிகளும் வாக்கெடுப்பை புறக்கணித்தால், அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்.
மாநிலங்களவையைப் பொருத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 141 உறுப்பினா்களும் (பாஜக மட்டும் 107), எதிரணிக்கு 83 உறுப்பினா்களும் உள்ளனா். இரு அணிகளையும் சேராத பாரத ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 20 உறுப்பினா்கள் உள்ளனா். இங்கு மசோதாவை நிறைவேற்ற 163 வாக்குகள் தேவை. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படாத பட்சத்தில், அது மாநிலங்களவையில் எடுத்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகளிா் இடஒதுக்கீடு: தில்லி பேரவையின் சிறப்பு அமா்வு நாளை கூடுகிறது!

மகளிா் இடஒதுக்கீடு மசோதா! திமுகவுக்கு பெண்கள் பாடம் புகட்டுவாா்கள்: பியூஷ் கோயல்!

ஏமா(ற்)றுகிறார்கள்!

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும்: அமைச்சா் இ.பெரியசாமி
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



