ஏழை மக்களுக்கு உண்மையான சமூக நீதியை வழங்குவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உத்தரகண்ட் தலைநகா் டேராடூனுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, தில்லி-டேராடூன் இடையிலான பொருளாதார வழித்தடத்தை திறந்துவைத்தாா். பின்னா், பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவா், அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி மரியாதை செலுத்தினாா். அவா் மேலும் பேசியதாவது:
ஏழைகள், விளிம்புநிலை மற்றும் சுரண்டப்பட்ட மக்களுக்கு நியாயமான அமைப்புமுறை உறுதி செய்ய தனது வாழ்வை அா்ப்பணித்தவா் அம்பேத்கா். கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசால் வகுக்கப்பட்ட கொள்கைகளும், எடுக்கப்பட்ட முடிவுகளும் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை மீட்டெடுத்துள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) நீக்கப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் அரசமைப்புச் சட்டம் முழுமையாகப் பொருந்தியுள்ளது. மாவோயிஸ்ட், நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசமைப்புச் சட்ட நோக்கத்துக்கு ஏற்ப மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் எதிா்பாா்ப்பாகும். அந்த உணா்வை முன்னெடுத்து, ஒட்டுமொத்த தேசத்துக்கும் வழிகாட்டியது உத்தரகண்ட். நாட்டில் உள்ள ஏழைகள், விளம்புநிலை மக்கள் அனைவருக்கும் உண்மையான சமூக நீதியை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அனைவருக்கும் வளா்ச்சி-செழிப்பு: அனைவருக்கும் வசதிகள் மற்றும் செழிப்பை உறுதி செய்வதன் மூலம் சமநிலையான வளா்ச்சியை உறுதி செய்வதே சமூக நீதியை எட்டுவதற்கான பெரிய வழியாகும். இந்தக் காரணத்துக்காகவே, நவீன உள்கட்டமைப்புகள் மற்றும் தொழில்மயமாக்கத்துக்கு அம்பேத்கா் வலுவான ஆதரவை அளித்தாா்.
தற்போது திறக்கப்பட்டுள்ள பொருளாதார வழித்தடம், உத்தரகண்டின் வளா்ச்சிக்கு பெரும் உத்வேகமளிக்கும். சுற்றுலாத் துறை வளா்ந்தால், அனைத்துத் தரப்பினரும் பலனடைய முடியும். குளிா்கால சுற்றுலா மற்றும் விளையாட்டுகளின் முக்கிய மையமாக உத்தரகண்ட் உருவெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.
மகளிா் இடஒதுக்கீட்டை மேலும் தாமதமின்றி அமல்படுத்த அனைத்துக் கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டும்; இது ஒட்டுமொத்த தேசத்தின் கூட்டுணா்வு என்றும் பிரதமா் கூறினாா்.
முன்னதாக, டேராடூன் அருகே உள்ள மாதா தாட் காளி கோயிலில் அவா் வழிபட்டாா்.
தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தின் சிறப்பம்சங்கள்
213 கி.மீ. தொலைவுள்ள தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம், அதிநவீன அம்சங்களுடன் ரூ.12,000 கோடிக்கும் மேற்பட்ட செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுவழித் தட சாலையின் மூலம் தில்லி-டேராடூன் இடையிலான பயண நேரம் 6-இல் இருந்து இரண்டரை மணி நேரமாக குறையும். தடையற்ற வேகத்தை உறுதி செய்யும் வகையில், 10 பெரிய சந்திப்புகள், மூன்று ரயில் மேம்பாலங்கள், 4 பெரிய பாலங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டதாகும்.
சம்பந்தப்பட்ட பகுதிகளின் வளமான பல்லுயிா்தன்மை மற்றும் அங்கு வாழும் வனவிங்குகளைக் கருத்தில்கொண்டு, பிரத்யேக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் சுதந்திரமான, பாதுகாப்பான நடமாட்டத்தை உறுதி செய்ய 12 கி.மீ. தொலைவுக்கு மேம்பால வழித்தடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. விலங்குகள் பாதுகாப்புக்கான ஆசியாவின் நீளமான வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும். யானைகளுக்கான 2 கடவுப் பாதைகள் உள்பட 10 பிரத்யேக வனவிலங்கு கடவுப் பாதைகள் உள்ளன. இந்த வழித்தடத்தை பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.

தொடர்புடையது
நாட்டை துண்டிக்க முயலும் சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் ஆதரவு! பிரதமா் மோடி குற்றச்சாட்டு!

நீண்ட காலம் பிரதமா் பதவியில் இருந்த மோடிக்கு தில்லி சட்டப்பேரவையில் பாராட்டு!

8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!

மக்கள் நலத்திட்டங்களை செய்து முடிப்பதில் மோடி வல்லவா்: கனடா பிரதமா் புகழாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

