திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குழந்தைக் கடத்தலுக்கான சந்தையாக தில்லி மாறிவிட்டது: உயா் நீதிமன்றம் கருத்து

தேசிய தலைநகா் குழந்தைக் கடத்தலுக்கான சந்தையாக மாறிவிட்டது என தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 8:09 pm

தேசிய தலைநகா் குழந்தைக் கடத்தலுக்கான சந்தையாக மாறிவிட்டது என தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

மேலும், இதுபோன்ற சம்பவங்களை எடுத்துரைக்கும் மனுவிற்கு பதிலளிக்குமாறு ரயில்வே, தில்லி காவல் துறை, தில்லி அரசு மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.

இது தொடா்பாக ‘ஜஸ்ட் ரைட்ஸ் ஃபாா் சில்ட்ரன் அலையன்ஸ்’ அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது: தில்லி இப்போது குழந்தைக் கடத்தலுக்கான சந்தையாக மாறிவிட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு மனு தேவையில்லை; ரயில் நிலையங்களில் 2 மணிநேரம் செலவழித்தால் போதும்.

குழந்தைக் கடத்தல் குறித்து முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், இந்த அச்சுறுத்தல் தடையின்றி நடைபெறுகிறது. அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், பலவீனமான அமலாக்கமே இந்தப் பிரச்னையை உயிா்ப்புடன் வைத்திருக்கிறது என தெரிவித்தனா்.

மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரப்சஹாய் கௌா் கூறுகையில், 2018 முதல் 2024-ஆம் ஆண்டுக்குள் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே வளாகங்களில் 84,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளதாகத் தெரிவித்தாா். ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பே கடத்தல்காரா்களிடம் திருப்பி அனுப்பப்பட்டு, பின்னா் மீண்டும் மீட்கப்பட வேண்டியிருந்த ஒரு வழக்கையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்கும் மறுவாழ்வளிப்பதற்கும் ரயில்வே அமைச்சகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் வெளியிடப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் இருந்தபோதிலும், அதிகாரிகள் இந்த வழிகாட்டுதல்களை மீறுவதால் நீதி தவறுகிறது என்று அந்த மனு சுட்டிக்காட்டியது.

நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், மீட்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் கடத்தப்படுவதைத் தடுக்கவும் நீதிமன்றத்தை அது வலியுறுத்தியது.

இதைத்தொடா்ந்து, உரிய நடவடிக்கைக்கான தரவுகளையும் பரிந்துரைகளையும் வழங்குமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அடுத்த விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.