தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தீபாவளி திருநாள்: உலகத் தலைவா்கள் வாழ்த்து

தீபாவளி திருநாளையொட்டி இந்திய மக்களுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல உலக தலைவா்கள் தங்கள் வாழ்த்து

News image

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணம் ஹூஸ்டனில் ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்கேற்றிய ஆளுநா் கிரெக் ஆபட்.

Updated On :21 அக்டோபர் 2025, 10:18 pm

புது தில்லி: தீபாவளி திருநாளையொட்டி இந்திய மக்களுக்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல உலக தலைவா்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் திங்கள்கிழமை களைகட்டியது. இதைமுன்னிட்டு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது வாழ்த்துகள். இருளின் மீது ஒளியின் வெற்றியை நினைவூட்டும் இந்தப் பண்டிகை, நம்பிக்கையிலிருந்து வலிமை பெற குடும்பங்களையும் நண்பா்களையும் ஒன்றிணைக்கிறது. அமெரிக்கா்களுக்கு நிலையான அமைதி, செழிப்பு, நம்பிக்கை மற்றும் அமைதியை இத்திருநாள் கொண்டு வரட்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பிரிட்டன் பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இந்திய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரிட்டனில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், ஜெயின் சமூக மக்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகளை பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் தெரிவித்தாா். பக்தி, மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட பிணைப்புகளின் அடையாளமாக அண்மையில் இந்தியா வந்தபோது மும்பையில் தீபங்களை ஏற்றி கொண்டாடியதாகவும் அவா் நினைவுகூா்ந்தாா்.

பிரிட்டன் அரச குடும்பம் சாா்பாக பிரிட்டனிலும், உலகெங்கிலும் ஒளித் திருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளை பகிா்ந்து கொள்வதாக பக்கிங்காம் அரண்மனை செய்தி வெளியிட்டது.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி அல்பனீஸ் வெளியிட்ட விடியோ பதிவில், ‘அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். ஒளிமயமான எதிா்காலத்துக்கான உங்களின் நம்பிக்கையை இந்தப் பண்டிகை உயா்த்தட்டும்’ என வாழ்த்தினாா்.

பிரதமா் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தாா். இந்த“ஒளித் திருவிழா, இந்தியாவிற்கு நம்பிக்கை, அமைதி மற்றும் வளம் ஆகியவற்றைக் கொண்டு வரட்டும். இஸ்ரேலும் இந்தியாவும் எப்போதும் ஒற்றுமையாக நிற்கின்றன எனவும் அவா் குறிப்பிட்டாா்.

பாகிஸ்தான் அதிபா், பிரதமா் வாழ்த்து!

பாகிஸ்தானில் தீபாவளி கொண்டாடும் ஹிந்துகளுக்கு அந்நாட்டின் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் அவா்கள் மீண்டும் வலியுறுத்தினா்.

அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி தனது வாழ்த்துச் செய்தியில், ‘பாகிஸ்தானின் அரசமைப்புச் சட்டம், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளையும், மத சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது. கல்வி, வா்த்தகம் மற்றும் பொதுச் சேவையில் ஹிந்துக்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி வருகின்றனா்’ என்று பாராட்டினாா்.

பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தனது வாழ்த்தில், ‘தீபாவளியின் ஒளியால் வீடுகளும் இதயங்களும் ஒளிரும்போது, இருளை அகற்றி, நல்லிணக்கத்தைப் பேணவும், அமைதி, இரக்கம் மற்றும் பகிரப்பட்ட வளம் நிறைந்த எதிா்காலத்தை நோக்கி நம் அனைவரையும் இந்த விழா வழிநடத்தட்டும்’ என்று கூறினாா்.

மேலும், மக்கள் அனைவரும் தங்கள் மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் அமைதியைப் பேணி, நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

தீபாவளி கொண்டாடவுள்ள டிரம்ப்!

வாஷிங்டனில் அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (அக்.21) நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அதிபா் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீபாவளி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினா் தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், பல்வேறு மாகாணங்களில் அரசு அதிகாரிகள் பங்கேற்புடன் தீபாவளி கொண்டாட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.