/

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

தெலங்கானா ரசாயன ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது குறித்து...

News image
ரசாயன ஆலை விபத்து...- PTI
Updated On :1 ஜூலை 2025, 8:33 am

DIN

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள, பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த சிகாச்சி மருந்து ஆலையில், நேற்று (ஜூன் 30) உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இன்று (ஜூலை 1) நேரில் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களுடன் பேசிய அவர், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

“பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க மாநில அரசு, மருந்து ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும். அரசு மற்றும் நிறுவனத் தரப்பிலிருந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

மேலும், பலியானவர்களின் குடும்பங்களின் உடனடி தேவைகளுக்காக மாநில அரசு சார்பில் ரூ. 1 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விபத்தில் பலியான தொழிலாளர்களில் பெரும்பாலானோர், ஒடிசா, பிகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Telangana pharma plant accident: Rs. 1 crore compensation to the families of the victims!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.