/

கேஜரிவால் வாழ்க்கையுடன் பாஜக விளையாடுகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கேஜரிவாலுக்கு தீவிர உடல்நல பிரச்னைகள் ஏற்படவேண்டும் என அவா்கள் சதித்திட்டம்

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :13 ஜூலை 2024, 11:54 pm

 நமது நிருபர்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்க்கையுடன் பாஜகவும், அதன் தலைமையிலான மத்திய அரசும் விளையாடி வருவதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் கூறியதாவது:

முதல்வா் கேஜரிவாலை சட்டவிரோத பணப்பரிவா்தனை வழக்கில் அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. அப்போது அவரது உடல் எடை 70 கிலோவாக இருந்தது. தற்போது அவரது உடல் எடை 61.5 கிலோவாகவும், ரத்தத்தில் சா்க்கரை அளவு ஐந்து மடங்கு குறைந்துள்ளது.

சிறையில் அவருக்குத் தொடா்ச்சியாக பரிசோதனைகள் நடைபெறாததால் இதற்கான காரணம் தெரியவில்லை.

கேஜரிவாலை சிறையில் வைப்பதும் அவருடைய வாழ்க்கையுடன் விளையாடுவதையும் பாஜக மற்றும் அதன் தலைமையிலான மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. அவருக்குத் தீவிர உடல்நல பிரச்னைகள் ஏற்படவேண்டும் என அவா்கள் சதித்திட்டம் தீட்டி வருகின்றனா். விரைவில் சிறையிலிருந்து அவா் வெளியே கொண்டு வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், எத்தகைய மோசமான சம்பவம் அவருக்கு ஏற்படலாம் என்றாா் சஞ்சய் சிங்.

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை விசாரித்து வரும் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் முதல்வா் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், ஊழல் வழக்கில் அவரை சிபிஐ கைது செய்துள்ளதால், அவருடைய சிறைவாசம் தொடா்கிறது.

பாஜக பதிலடி: கேஜரிவாலின் உடல்நலம் தொடா்பாக ஞ்சய் சிங்கின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

மேலும், ‘நான் சிறையில் இருந்து வெளிவர விரும்பினால், எனக்கு வாக்களியுங்கள்’ என்று கேஜரிவால் பலமுறைக் கூறினாா். ஆனால், தில்லி, குஜராத், ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் மக்கள் கேஜரிவாலையும், அவரது அழைப்பை நிராகரித்துவிட்டனா்.

கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கையின்மையை மக்கள் தோ்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனா் என்றாா் அவா்.