/

உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் மேல்முறையீடு!

தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அரவிந்த் கேஜரிவால்.

News image

அரவிந்த் கேஜரிவால் - ANI

Updated On :10 ஏப்ரல் 2024, 4:08 am

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை உறுதிசெய்த தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விரைவில் பட்டியலிட வேண்டும் என்று அவரது தரப்பில் புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது. அப்போது, இதை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான கோரிக்கையை மின்னஞ்சலில் அனுப்புமாறும் கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வியிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் சிங்வி கூறுகையில், "இந்த விவகாரம் அவசரமானது. தில்லி முதல்வர் தொடர்புடையது. ஒரு நம்பகமற்ற ஆவணத்தின் அடிப்படையில் கேஜரிவால் கைது செய்யப்பட்டார்' என்றார்.

முன்னதாக, முதல்வர் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில், அமலாக்கத் துறையின் கைதை உறுதி செய்தது.

தில்லி அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்து செயல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தில்லி கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்காக முதல்வர் கேஜரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையின் கட்டாய நடவடிக்கையில் இருந்து கேஜரிவாலுக்கு பாதுகாப்பு வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்தது.

இந்த உத்தரவு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மார்ச் 21-ஆம் தேதி கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.