நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

தில்லியில் மாசுவைக் குறைக்க குளிா்கால செயல் திட்டம் அறிமுகம்

தேசியத் தலைநகா் தில்லியில் மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக குளிா்கால செயல் திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:03 am

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக குளிா்கால செயல் திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினாா். மேலும், நகர அரசின் நடவடிக்கையால் தில்லியில் மாசு அளவு குறைந்துள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லி தலைமைச் செயலகத்தில் மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக சுற்றுச்சூழல் துறையின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள 15 அம்ச குளிா்கால செயல்திட்ட அறிக்கையை அறிமுகப்படுத்தி வைத்த முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் மின்சாரப் பேருந்துகளின் அறிமுகம் மற்றும் மின்சார வாகனக் கொள்கை போன்ற நகர அரசின் பல முன்முயற்சிகளால் கடந்த 8 ஆண்டுகளில் கடுமையான மாசு அளவைக் கண்ட நாள்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குளிா்கால செயல்திட்டத்தின் படி, சுமாா் 5,000 ஹெக்டோ் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் ‘பூசா ரசாயனக் கலவை’, பயிா்கழிவுகள் எரிக்கப்படுவைத் தடுக்கும். இதுவே கடந்த ஆண்டு 4,400 ஹெக்டோ் பரப்பளவில் மட்டுமே தெளிக்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஏ.ஆா்.ஐ.) உருவாக்கிய இந்த ‘பூசா ரசாயனக் கலவை’, வைக்கோலை 15 முதல் 20 நாள்களில் உரமாக மாற்றக்கூடிய நுண்ணுயிா் கரைசல் ஆகும்.

நகரத்தில் தூசி மாசுபடுவதைத் தடுக்க 530 தண்ணீா் தெளிப்பான்களை தில்லி அரசு பயன்படுத்துகிறது. 385 குழுக்கள் வாகனங்களின் மாசு சான்றிதழ்களை சரிபாா்த்து, அதில் காலாவதியான பழைய வாகனங்களின் இயக்கத்தை தடுக்கிறது. தில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு தடை விதித்தது. இந்த உத்தரவை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கடந்த 2014-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான வாகனங்களை பொது இடங்களில் நிறுத்தக் கூடாது.

மேலும், தில்லியில் திறந்த வெளியில் குப்பைகளை எரிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைச் செயல்படுத்த 611 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ‘பசுமை தில்லி’ கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து, மாசு ஏற்படுத்தும் செயல்கள் குறித்து அரசுக்கு புகாா் தெரிவிக்கவும் முதல்வா் கேஜரிவால் தில்லி மக்களை வலியுறுத்தினாா். இந்த செய்தியாளா் சந்திப்பின் போது சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.