தலாக் விவாகரத்து முறையை முஸ்லிம் சமூகத்தினர் கடந்த 1,400 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர் என்று உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ராமர் பிறந்த இடம் அயோத்தி என்ற நம்பிக்கையை எப்படி அரசியல் சாசன வரம்புக்குள் கொண்டுவர இயலாதோ, அதுபோலவே தலாக் விவாகரத்து நம்பிக்கைகளையும் கொண்டு வரக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.
மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் முறையை இஸ்லாமியர்கள் பின்பற்றி வருவதற்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.