/

ஜேட்லி பதவி விலக வேண்டும்- காங்கிரஸ்; சிறப்பு விசாரணை வேண்டும்- பாஜக எம்.பி.

கிரிக்கெட் சங்க முறைகேட்டில் தொடர்புடைய அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என கீர்த்தி ஆசாத்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:51 am

PTI

தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம் இன்று மக்களவையில் எதிரொலித்தது. முறைகேட்டில் தொடர்புடைய அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த அருண் ஜேட்லி, காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை மற்றும் முகாந்திரம் அற்றவை என்றார்.

எனினும், காங்கிரஸ் கட்சியினர் ஜேட்லி பதவி விலக வலியுறுத்தி அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் அருண் ஜேட்லி தலைவராக இருந்த போது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்பிரச்னையில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், இன்று மக்களவையில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது, அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர். அவர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கோஷமிட்டனர்.

இந்த விவகாரத்தில் பாஜக ஒரு சங்கடமான நிலையை எதிர்கொண்டது. அக்கட்சியின் எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தை சிறப்பு புலனாய்வு போலீஸார் விசாரணை செய்து குறித்த காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

ஜேட்லி ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஜேட்லி பொது வாழ்வில் நேர்மையை கடைப்பிடித்து வருபவர் என்றார்.

விவாதத்தில் பேசிய அருண் ஜேட்லி, காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகள் தவறானவை. இதை மட்டுமே என்னால் கூற முடியும் என்றார். மேலும், தீவிர மோசடி புலனாய்வு துறை நடத்திய விசாரணையில், முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றார்.

இதற்குப் பதிலளித்த ஆசாத், தில்லி கிரிக்கெட் சங்கத்துக்கு சமீபத்தில் சி.பி.ஐ அனுப்பியுள்ள நோட்டீஸையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றார்.

விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், தில்லி கிரிக்கெட் சங்கம் ஒரு லேட்-டாப் 36000 ரூபாய்க்கு ஒரு நாள் வாடகைக்கு எடுத்துள்ளது. இதேபோல ஒரு பிரிண்டர் 3000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த முறைகேட்டில் ஜேட்லிக்கும் தொடர்பு உள்ளது. எனவே, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த ஜேட்லி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சீரமைக்கப்பட்ட நேரு மைதானம், தயான்சந்த் மைதானங்களுக்கான செலவை விட, தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் குறைந்த செலவிலேயே சீரமைக்கப்பட்டுள்ளது. கோட்லா மைதானத்தில் 42,000 இருக்கைகள் உள்ள நிலையில், தயான்சந்த் மைதானத்தில் 14,000 இருக்கைகளே உள்ளன என்றார்.

எனினும், அவரது விளக்கை ஏற்காத காங்கிரஸ் கட்சியினர் சோனியா தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்களை கேலி செய்து ஆளும் கட்சியினர் கூச்சலிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.