/

விவாகரத்து செல்ஃபியா? இதென்ன கொடுமை!

ஒரு உறவை உருவாக்குவது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கடினம் அதை முறித்துக்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:45 pm

வி. உமா

ஒரு உறவை உருவாக்குவது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கடினம் அதை முறித்துக் கொள்வது. வருடக்கணக்காக ஆசையும் அன்பும் சேர்ந்து வளர்ந்த உறவு வலியுடன் முறிந்து போவது துயரம். உலகமெங்கும் சமீப காலமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். திருமணம் முடிந்த சில மாதங்களில் விவாகரத்து என்ற நிலைமாறி வாரக்கணக்கிலும் நாட்கணக்கிலும் கூட பிரிவுகள் நிகழ்வதுதான் சோகம். 

Story image

கோபம், ஆற்றாமை, வெறுப்பு போன்ற மனநிலையில் தான் தம்பதிகள் முன்பு பிரிந்து வந்தனர். ஆனால் சில ஜோடிகள் தங்கள் பிரிவையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் கொண்டாடும் கலாச்சாரம் சமீபத்தில் பரவி வருகிறது. டிவோர்ஸ் செல்ஃபிக்கள் என்று இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் இணையதளங்களிலும் வலம் வரும் புகைப்படங்களில் விவாகரத்தான தம்பதியரின் மகிழ்ச்சியான புகைப்படங்கள் இதற்குச் சான்று. இந்தப் புகைப்படங்களில் அவர்கள் முகம் கொள்ளாச் சிரிப்புடனும், விரல்களை உயர்த்தி தம்ஸ் அப் சின்னம் காட்டியும் தங்கள் வெற்றியையும் விடுதலையையும் காட்சிப் படுத்துகிறார்கள். (எதற்கான வெற்றி, எதிலிருந்து விடுதலை என்ற புரிதல் இருந்திருந்தால் விவாகரத்து வரை சென்றிருக்க மாட்டார்கள் அல்லவா!)

Story image

அதென்ன டிவோர்ஸ் செல்ஃபி? தம்பதிகள் எப்போது எடுக்கிறார்கள் என்று விசாரித்துப் பார்த்ததில், குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு முழுமையான விடுதலை சட்டரீதியாக கிடைத்தபின், கடைசியாக ஜோடியாக எடுத்துக் கொள்ளும் செல்ஃபிதான் இந்த டிவோர்ஸ் செல்ஃபி. சிலர் விவாகரத்து முடிந்த கையோடு லைவ் காட்சிகளாக அதை ட்வீட் செய்வதும், சிறியதாக ஒரு வீடியோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிடுவதிலும் மும்முரமாகியுள்ளனர். இது பார்க்கவும் கேட்கவும் வினோதமாக இருந்தாலும், இப்படிச் செய்வதால் விவாகரத்துப் பெற்ற தம்பதிகளுக்கு ஒருவித ஆசுவாசம், ஒரு ரிலீஃப் கிடைப்பதாக பதிவு செய்கிறார்கள். தவிர அவர்களது தோழமைகளிடமிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும் ஆறுதல் கிடைப்பதும் அவர்களை இந்த மன அழுத்தத்திலிருந்து விரைவில் வெளியேற வைத்துவிடுகிறது என்கிறார்கள்.

Story image

படங்கள் மட்டுமல்ல, அதற்கு ஏற்ற சில கேப்ஷன்களும் அவர்களே தருவது புதுமை. முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு, விவாகரத்தான கணவருடன் நெருக்கமாக ஃபோஸ் கொடுத்தபடி ஒரு பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியது, ‘இப்போது நாங்கள் நாடக நடிகர்கள், அவ்வளவுதான்’. இன்னொரு பெண் இப்படி எழுதுகிறார், ‘பிரிந்து வாழப் போகும் மிச்ச வாழ்க்கைக்கு ஒரு பெரிய சியர்ஸ்’.
 
நல்ல வேளை நம் நாட்டில் இன்னும் இந்தக் கலாச்சாரம் வரவில்லை. ஆனால் நம்ப முடியாது இந்தக் கட்டுரைக்குப் பின் அது நடந்தாலும் நடக்கலாம், நான் பொறுப்பல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.