/

சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசை தீர்க்க வந்த ஊதா நிற மாம்பழங்கள்!

இந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:25 pm

RKV

இந்திய மாம்பழங்களை பிளாக் பெர்ரி பழங்களின் மரபியல் காரணியுடன் இணைத்து உருவாக்கப்பட்டவையே ஊதா நிற மாம்பழங்கள். இயல்பில் மஞ்சள் நிறத்திலிருக்கும் மாம்பழங்களுக்கு ஊதா நிறம் கிடைத்ததின் பின்னணி இது தான். பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் ஊதா நிறத்தில் விளையும் இந்த மாம்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளவை என்று கூறப்படுகிறது. வழக்கமான மஞ்சள் நிற மாம்பழங்களில் இருக்கும் இனிப்புச் சுவையின் சதவிகிதத்தில் வெறும் 25 % மட்டுமே இந்த ஊதா நிற மாம்பழங்களில் இருக்குமாம். தற்போது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் அமோகமாக விளைவிக்கப்பட்டு வரும் இந்த வகை மாம்பழங்கள் கூடிய விரைவில் ஆசியாவின் பிற பகுதிகளிலும் விளைவிக்கப்படவிருப்பதாகத் தகவல்.

Story image

சாதாரண வகை மாம்பழங்களில் 96 சதவிகிதம் குளுகோஸ் இடம் பெற்றிருக்கும். ஆனால், சர்க்கை நோயாளிகளுக்கென விளைவிக்கப்படக் கூடிய இவ்விதமான சிறப்பு வகை மாம்பழங்களில் 82 சதவிகிதம் சுக்ரோசும், 18 சதவிகிதம் குளுகோஸும் இருக்கும். இந்த மாம்பழங்களுக்கு யூரியா, உரம் என எதுவும் தேவையில்லை.இயற்கையாகவே இந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த  பாக்டீரியாக்களைத் தன்னகத்தே  கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இந்திய சீதோஷ்ண நிலையில் மிக அருமையான மகசூலைத் தரும் வகையில் வளரக்கூடிய இவ்வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான மண் வகைகளிலும் வளர்வதற்கு ஏற்றது. இதில் சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை. ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Story image

உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத்தில் இருக்கும் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிறுவன மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தொடர் ஆய்வுகளின் பயனாக கண்டுபிடித்தது தான் இந்த ஊதா நிற மாம்பழ வகைகள். அவர்களது ஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே! ஆகவே அவர்களும் பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர். இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.