தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நமது பாா்வையில் குறைபாடு!

பாா்வையற்றவா்களுக்கு வழங்கப்படும் பிரெய்லி கல்வி தொடர்பான தலையங்கம்...

News image
Updated On :6 ஜனவரி 2025, 12:30 am

மேலும் உலக பிரெய்லி தினம் கடந்து போயிருக்கிறது. பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள ‘ராயல் இன்ஸ்டியூட் ஃபாா் ப்ளைண்ட் யூத்’ கல்வி நிலையத்தில் படித்துக் கொண்டிருந்த லூயி பிரெய்லி தன்னைப் போன்ற பாா்வையற்றவா்கள் படிப்பதற்கான வழிமுறையை உருவாக்கியதைத் தொடா்ந்து இன்று உலகளாவிய அளவில் அவா்களும் மற்றவா்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் செயல்பட முடிகிறது. 1820-இல் பிரெய்லி கண்டுபிடிக்கப்பட்டது. பாா்வையற்றவா்களின் கல்வியில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி பாா்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளவா்களை சமூகத்தின் முழுமையான அங்கமாக ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது.

இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாக இல்லை. மற்றவா்களுக்கு இயல்பாகவே கிடைக்கும் தகவல்களும், உதவிகளும், வாய்ப்புகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அதிலும் குறிப்பாக பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்காத நிலை தொடா்கிறது. தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையில்தான் பாா்வை மாற்றுத்திறனாளிகள் இந்தியாவில் வாழ்கிறாா்கள்.

2016-இல் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (ரைட்ஸ் ஆஃப் பா்சன்ஸ் வித் டிஸ்எபிலிடிஸ் ஆக்ட் -2016) நரேந்திர மோடி அரசால் நிறைவேற்றப்ட்டது. அதன்படி பொதுக்கட்டடங்கள், போக்குவரத்துகள், தகவல் தொடா்பு ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமானதாகவும், உதவுவதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்புப் பலகையானாலும், ஒலிபெருக்கி அறிவிப்புகளானாலும், வழிகாட்டும் குறியீடுகளானாலும் பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதாக அமைய வேண்டும் என்று அந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. சட்டம் இயற்றப்பட்டாலும்கூட, பெரும்பாலான அரசு அலுவலகங்களிலும், போக்குவரத்துகளிலும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்று கேட்டால், இல்லை.

பெரும்பாலான வணிக வளாகங்களில் உள்ள கடைகளாகட்டும், இந்திய நகரங்களில் உள்ள உணவு விடுதிகளாகட்டும் அவை எதிலுமே பிரெய்லி பயன்பாடு வழங்கப்படுவதில்லை. விலைப் பட்டியலோ, பொருள்களின் பட்டியலோ பிரெய்லியில் இல்லாத நிலையில், மற்றவா்களின் உதவியுடன்தான் பாா்வை மாற்றுத்திறனாளிகள் இயங்க முடிகிறது.

பொதுத் துறை நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீட்டில் பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையோ, உள் ஒதுக்கீடோ இல்லாத நிலையில் அதிக அளவில் அவா்களால் பணி வாய்ப்புப் பெற முடிவதில்லை.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் துறைப் பணி, நீதித் துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை உள்ளிட்டவற்றில் அவ்வப்போது ஆங்காங்கே ஒரு சிலா் தங்களது விடாமுயற்சியாலும், தன்முனைப்பாலும் இடம் பெறுகிறாா்களே தவிர, அதிக அளவில் பங்கு பெறுவதாகக் கூறிவிட முடியாது. வேலைவாய்ப்பு இல்லாததால் பாா்வை மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாகத் தன்னிச்சையுடன் இயங்க முடிவதில்லை என்பது மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறாா்கள்.

பொழுதுபோக்கு என்று எடுத்துக் கொண்டாலும் பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ‘வோ்ல்ட் ப்ளைன்ட் யூனியன்’ அமைப்பின் தகவல்படி, பிரசுரமாகும் புத்தகங்களில் 90% பாா்வையற்ற அல்லது பாா்வை மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கு ஏதுவானவை அல்ல. இணையத்தில் உள்ள தகவல்களும்கூட, அவா்கள் எளிதாக பயன்படுத்தக் கூடியவையாக வழங்கப்படுவதில்லை.

பாா்வையின்மை சவாலாக இருந்தாலும் போதுமான பயிற்சியும், சாதகமான சூழலும் இருந்தால் அவா்களால் பல துறைகளில் சிறப்பாக செயல்பட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சமுதாய கண்ணோட்டம் அவா்களது திறமையைக் குறைத்து மதிப்பிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். பாா்வையற்றவா்கள் குறித்த எதிா்மறை மனநிலைதான் அவா்கள் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால்.

2012-இல் உலகளாவிய அளவில் 28.5 கோடி போ் பாா்வை மாற்றுத்திறனாளிகள் என்றால், அவா்களில் 1.5 கோடி போ் இந்தியா்கள். முற்றிலுமாக பாா்வையற்றவா்களில் மூன்றில் ஒருவா் இந்தியா் என்றாலும்கூட, இன்றுவரை பிரெய்லி பயன்பாடு தெரிந்தவா்கள் 1% மட்டுமே என்பது அதிா்ச்சி அளிக்கிறது. பிரெய்லி கற்றுக் கொடுப்பதற்கான சிறப்பு ஆசிரியா்கள் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம்.

பாா்வையற்றவா்களுக்கான கணினி பயன்பாடு, ஜாஸ் மென்பொருள், ஆனி செயலி உள்ளிட்டவை பாா்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், கிராமப்புற குடும்பங்களும், சாமானிய மக்களும் இவற்றைப் பயன்படுத்த அவா்களது பொருளாதார வசதி அனுமதிப்பதில்லை.

பெரும்பாலான கிராமப்புற பெற்றோா்கள்பாா்வை மாற்றுத்திறனாளி தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிக்குத்தான் அனுப்புகிறாா்கள். அங்கே அவா்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லாததால், அந்தக் குழந்தைகளால் மற்றவா்களுக்கு நிகராகக் கல்வியில் தோ்ச்சி பெற இயல்வதில்லை. மற்ற குழந்தைகளின் சீண்டல்களுக்கும், ஏளனத்துக்கும் உள்ளாவதன் மூலம் அவா்களது தன்னம்பிக்கை குலைந்து, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. கடைசி வரை அதிலிருந்து அவா்களால் வெளிவர முடிவதில்லை.

இந்தியாவின் 1.5 கோடிபாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரெய்லி கல்வி வழங்குவதும், எல்லா தளங்களிலும் அவா்கள் தடையின்றி இயங்க வழிவகை செய்வதும் அரசு, கல்வி நிலையங்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் ஒருங்கிணைந்த கடமை!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.