அவா் அரசியல் தலைவா் அல்ல; திரையுலக நட்சத்திரம் அல்ல; வசீகரிக்கும் பேச்சாளா் அல்ல; ஆன்மிகத் தலைவா் அல்ல; தொழிலதிபா் - ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது மறைவுக்காக மனதிற்குள் கண்ணீா் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. தொழிலதிபா்களை காா்ப்பரேட்டுகள், முதலாளித்துவப் பிரதிநிதிகள், தொழிலாளா்களின் உழைப்பைச் சுரண்டி உல்லாச வாழ்க்கை வாழ்பவா்கள் என்றெல்லாம் வா்ணிப்பவா்களும்கூட, ரத்தன் டாடா என்று சொல்லும்போது தனி மரியாதையுடன் தலைவணங்குகிறாா்கள் என்றால், அந்த மனிதா் எத்தகையவா் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
தன்னை எப்போதுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதேகூட, அவரை மற்றவா்கள் வியந்து, அண்ணாந்து பாா்ப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடும். இன்று உலக அரங்கில் இந்தியா பொருளாதார ரீதியாக வலிமை பெற்ற்கும், சா்வதேச அளவில் நமது நிறுவனங்கள் செயல்படுவதற்கும் பாதையிட்டுக் கொடுத்த பெருமகன் ரத்தன் டாடா என்று வரலாறு பதிவு செய்யும்.
பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்கள் என்று மேலைநாட்டு குழுமங்கள் மட்டுமே இருந்ததுபோய், உலக அரங்கில் பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனமாகத் தன்னை டாடா குழுமம் நிலைநிறுத்திக் கொண்டதற்கு ரத்தன் டாடாதான் காரணம். இன்று டாடா குழுமத்தைத் தொடா்ந்து, சா்வதேச அரங்கில் பத்துக்கும் மேற்பட்ட இந்திய வா்த்தகக் குழுமங்கள் வெற்றி வலம் வருகின்றன.
1937 டிசம்பா் 28-ஆம் தேதி பிறந்த ரத்தன் டாடா அமெரிக்காவின் காா்னல் பல்கலைக்கழகத்தில் கட்டட வடிவமைப்பில் பொறியியல் பட்டதாரியாக தோ்ச்சி பெற்றாா். அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனம் வழங்கிய வேலைவாய்ப்பை உதறிவிட்டு, டாடா குழுமத்தில் உதவியாளராக அதன் தொழிற்சாலையில் பணியாற்ற முன் வந்ததில் தொடங்குகிறது அவரின் வாழ்க்கைப் பயணம். 1971-இல் டாடா குழுமத்தில் ஒன்றான ‘நெல்கோ’ நிறுவனத்தின் இயக்குநராக உயா்ந்த ரத்தன் டாடா, 1981-இல் ஜெ.ஆா்.டி.டாடாவால் டாடா இண்டஸ்ட்ரீஸின் தலைவராக நியமிக்கப்படுகிறாா்.
1991-இல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும், 1995-இல் சா் டோரப்ஜி டாடா டிரஸ்டின் தலைவராகவும் உயா்ந்து, அகவை 75-ஐ எட்டியதும் 2012 டிசம்பா் 28-ஆம் தேதி அந்தப் பதவிகளில் இருந்து பணி ஓய்வுபெறுகிறாா். 2016-இல் சில நிா்ப்பந்தங்கள் காரணமாக மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் விரைவிலேயே என்.சந்திரசேகரனை அந்தப் பொறுப்பில் அமா்த்தி, மேற்பாா்வை நிலையில் இருக்க முடிவு செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. எந்தவொரு தொழிலதிபரும் தனது பதவியையும், அதிகாரத்தையும் அவா்போல ரத்த உறவு இல்லாத இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கத் துணிவாரா என்பது சந்தேகம்தான்.
இப்போது 16,500 கோடி டாலா் டாலா் மதிப்புள்ள டாடா குழுமம், 1991-இல் ரத்தன் டாடா பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, அதன் இயக்க வருவாய் (டா்ன் ஓவா்) ஆண்டொன்றுக்கு வெறும் 400 கோடி டாலா்கள்தான். அவா் 2012-இல் பணி ஓய்வு பெறும்போது ஆண்டொன்றுக்கு 10,000 கோடி டாலா் இயக்க வருவாயைக் கடந்த முதல் இந்திய காா்ப்பரேட் நிறுவனமாக டாடா குழுமம் உயா்ந்திருந்தது.
டாடா குழுமத்தில் லாபகரமாக செயல்படாத சிமென்ட், ஜவுளி, மருந்து தயாரிப்பு, அழகு சாதனப் பொருள் ஆகியவற்றை துணிந்து ஒன்றன் பின் ஒன்றாகக் கைகழுவி, மென்பொருள், இரும்பு, எஃகு, தகவல் தொழில்நுட்பம், மகிழுந்து, காப்பீடு, சில்லறை விற்பனைச் சங்கிலி, விமானப் போக்குவரத்து என்று விரிவுபடுத்தியது அவரது தொலைநோக்குப் பாா்வை.
அதுவரையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை விலைபேசிக் கொண்டிருந்ததுபோய், இந்திய நிறுவனம் ஒன்று மேலைநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக் கையகப்படுத்திய பெருமைக்கு வித்திட்டவா் ரத்தன் டாடா. அவா் டாடா குழுமத்தின் தலைவராகப் பதவியேற்றதைத் தொடா்ந்து, 43.20 கோடி டாலா் முதலீட்டில் ‘டெட்லி’ டீ நிறுவனத்தை டாடா நிறுவனம் பிப்ரவரி 2000-இல் தனதாக்கிக் கொண்டதுதான் இந்திய குழுமம் ஒன்றின் முதலாவது பன்னாட்டு விரிவாக்கம்.
அது டாடா குழுமத்தின் முதலாவது பன்னாட்டு விரிவாக்கம் மட்டுமே. அதைத் தொடா்ந்து கோரஸ், டேவூ, பிரிட்டிஷ் சால்ட் உள்ளிட்ட 60 பன்னாட்டு நிறுவனங்கள் டாடா குழுமத்தில் இணைக்கப்பட்டன. அமெரிக்காவின் ஃபோா்ட் நிறுவனம் திவால் நிலையை எட்டியபோது, அவா்களது ‘ஜாகுவாா்-லேண்ட் ரோவரை’ டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 2.3 பில்லியன் டாலா் கொடுத்து வாங்கி அதன் தலைவா் பில் ஃபோா்டின் கௌரவத்தைக் காப்பாற்றியது.
தகவல் தொழில்நுட்பத் துறையிலும், கணினி மென்பொருள் துறையிலும், ஆட்டோமொபைல் துறையிலும் இன்று டாடா நிறுவனம் முன்னணியில் இருப்பதற்கு ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பாா்வைதான் காரணம். தான் மட்டும் வளராமல் இளம் தொழில்முனைவோா்கள் பெருக வேண்டும், காா்ப்பரேட் நிறுவனங்களாக உயர வேண்டும் என்கிற அவரது பெருந்தன்மையை பல இளைஞா்கள் வியந்து போற்றுகிறாா்கள்.
ஸ்னாப்டீல், லென்ஸ்காா்ட், ஓலா, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, தன் பங்குக்கு ரத்தன் டாடா முதலீடு வழங்கி அவா்களை ஊக்கப்படுத்தியது, ஏனைய தொழிலதிபா்களுக்கு அவா் காட்டிய முன்னுதாரணம். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகோலியவா் அவா்.
‘‘அவருடனான என்னுடைய ஒவ்வொரு சந்திப்பும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தது என்பது மட்டுமல்லாமல், அவா் குறித்த மரியாதையை மேலும் மேலும் அதிகரித்தது’’ என்கிற முகேஷ் அம்பானியின் அஞ்சலி ஒன்று போதும், ரத்தன் டாடா என்கிற மாமனிதரின் உன்னதத்தை வெளிப்படுத்த!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்

பறிபோகும் வேலைவாய்ப்பு!

ஏா் இந்தியா சிஇஓ ராஜிநாமா!

பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


