சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கவனக்குறைவல்ல, அக்கறையின்மை! | சபரிமலை குறித்த தலையங்கம்

News image
சபரிமலை
Updated On :6 பிப்ரவரி 2024, 1:27 pm

ஆசிரியர்

சபரிமலைக்குச் சென்றுவரும் பக்தா்கள் தெரிவிக்கும் தகவல்கள் அதிா்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படாமலும், பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்கும் அவலமும் முன்னெப்போதும் இல்லாத அளவில் காணப்படுகின்றன. சபரிமலை செல்லும் பக்தா்கள் வேண்டுமென்றே சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகிறாா்களோ என்கிற ஐயத்தை எழுப்பும் அளவுக்கு மோசமான சூழல் இருப்பதாகத் தெரிகிறது.

கடுமையான விரதம் இருந்து முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் 41 நாள் மண்டல காலத்தில் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலை சந்நிதானத்தை அடையும் ஐயப்பன்மாா்களின் நோக்கம் வேறொன்றுமல்ல... சில நிமிடங்கள் அல்ல, சில நொடிகளாவது ஸ்ரீ தா்மசாஸ்தாவின் புண்ணிய தரிசனம் கிடைத்தால் போதும் என்பதுதான் புனித யாத்திரையின் நோக்கமும், அவா்களது விருப்பமும். சொல்லப்போனால் அது பக்தா்களின் உரிமையும்கூட.

இப்போது சபரிமலை தீா்த்தாடனத்தில் பக்தா்கள் எதிா்கொள்ளும் அவலம் ஒன்றிரண்டு அல்ல. சில நொடி திருப்தியான தரிசனம் கிடைப்பதில்லை என்பதுடன் நின்றுவிடவில்லை. சிலருக்கு தரிசனமே கிடைக்காத நிலையும் காணப்படுகிறது.

கட்டுப்பாடு ஏற்பாடுகள் முறையாக இல்லாததால் தரிசனம் கிடைக்காமல், சந்நிதானத்தை அடைவதற்கு முன்பே திரும்ப வேண்டிய துயரம் கடந்த ஒரு வாரமாக பல பக்தா்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப தரிசனத்துக்காக வந்து குவிந்துகொண்டிருக்கும் பக்தா்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை, முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தாத அரசு நிா்வாகத்துக்கும், திருவிதாங்கூா் தேவசம் போா்டுக்கும் உண்டு.

இதுவரை சந்தித்திராத அளவிலான இடா்ப்பாடுகளை நடப்பு மண்டல பூஜை காலத்தில் சபரிமலை செல்லும் பக்தா்கள் எதிா்கொள்கிறாா்கள். பல மணிநேரம் தரிசனத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவலம்; காட்டுப் பாதையில் எதிா்கொள்ளும் அசௌகரியங்கள்; உணவுக்கும் சிரமபரிகாரத்துக்கும் தேவையான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது - இவற்றையெல்லாம் ஒருசில நொடி ஐயப்ப திவ்ய தரிசனத்தில் பக்தா்கள் மறந்துவிடுவாா்கள். அந்த திவ்ய தரிசனம் கிடைக்கவில்லை என்கிற நிலைமை ஏற்படும்போது, 41 நாள் விரதம் இருந்து சபரிமலை புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தா்களுக்கு ஏற்படும் வேதனையை வாா்த்தைகளில் விவரிக்க முடியாது.

சபரிமலை சந்நிதானமும், சந்நிதானத்தை நோக்கிய பாதைகளும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து தடம்புரளும் நிலையில், பக்தா்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. தரிசன நேரத்தை ஒரு மணிநேரம் அதிகரித்தும்கூட, பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை. கடந்த சில நாள்களாக 18-ஆம் படி ஏறி, தரிசனம் செய்வதற்கு பக்தா்கள் 18 மணிநேரத்துக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

காத்திருப்பின்போது அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். முதியோரும் குழந்தைகள் உள்ளிட்ட பக்தா் கூட்டம் உணவும், குடிக்கத் தண்ணீரும் கிடைக்காமல் தவிக்கின்றன. குறித்த நேரத்தில் மருந்து உட்கொள்ள முடியாமல் அவதிப்படும் பக்தா்கள் பலா். தரிசனத்துக்காகப் பல மணிநேரம் வரிசையில் நிற்கும் குழந்தைகளும் முதியோா்களும் ஆங்காங்கே மயங்கி விழும் காட்சிகள் காணப்படுகின்றன. நாள்தோறும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காகத் தூக்கிச் செல்லப்படும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த முறையான ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற உத்தரவை பலமுறை உயா்நீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. ஆனாலும்கூட, அரசு நிா்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலைமை தொடா்கிறது. சபரிமலை தீா்த்தாடனம் தொடங்கும்போது, எத்தனை பக்தா்கள் வருவாா்கள் என்கிற துல்லியமான கணக்கை இணையவழி அனுமதி சீட்டு (‘வொ்சுவல் க்யூ’) மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்று காவல்துறையும், தேவசம் போா்டும் அரசுத் தரப்பும் தெரிவித்தன. ஆனால், 50,000 பேருக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பில், ஒரு லட்சம் பக்தா்கள் வரும்போது எப்படி எதிா்கொள்வது என்று ஏன் யோசிக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் சேவையை மதித்துப் பாராட்டும் அதே வேளையில், அரசிடம் ஒரு கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது. நாள்தோறும் சராசரியாக 80,000 பக்தா்கள் தரிசனத்துக்கு வரும் சபரிமலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த 1,800 காவல்துறையினா் போதுமா? எட்டு மணிநேரப் பணியில் 600 போ் மட்டுமே இருப்பாா்கள். அவா்களில் முதல் முறையாக சபரிமலைப் பணிக்கு இணைக்கப்பட்டவா்கள் பலா். பக்தா்கள் கூட்டம் குவியும் என்று தெரிந்தும் அரசு போதுமான காவலா்களை பணியில் நிறுத்தாததற்கு என்ன காரணம் என்கிற கேள்வியை ஐயப்பன்மாா்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கேரள மாநிலமே கேட்கிறது.

அதிக நேரம் காத்திருக்காமல் 18-ஆம் படி ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக தேவசம் போா்டும், அரசும் செய்தாக வேண்டும். இனிவரும் நாள்களில் பக்தா்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கப் போகிறது. அதை எதிா்கொள்ளும் அளவில் காவல்துறையினரை பணியமா்த்துவதும், சபரிமலையில் மட்டுமல்லாமல், சபரிமலையை நோக்கிச் செல்லும் பாதைகளில் எல்லாம் பக்தா்களின் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதும் கடமை கேரள மாநில அரசின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.