மீண்டும் சீண்டும் சீனா!
அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு புதிய பெயர்களைச் சூட்டியதன் மூலம் அடுத்த சுற்று மோதலைத் தொடங்கியுள்ளது சீனா.


அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு புதிய பெயர்களைச் சூட்டியதன் மூலம் அடுத்த சுற்று மோதலைத் தொடங்கியுள்ளது சீனா. இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியான அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று அழைப்பதுடன் "ஜங்னான்' என்று பெயர் சூட்டி பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில், அருணாசலில் உள்ள 2 நிலப் பகுதிகள், 2 குடியிருப்புப் பகுதிகள், 5 மலைச்சிகரங்கள், 2 ஆறுகள் ஆகியவற்றுக்குப் புதிய பெயரை சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் அண்மையில் (ஏப்ரல் 2) அறிவித்துள்ளது.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "சீனாவின் நடவடிக்கையை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாகத் திகழ்ந்து வருகிறது, எதிர்காலத்திலும் திகழும். புதிய பெயர்களை சூட்டுவது எதார்த்த நிலையை மாற்றி விடாது' என்று கூறியுள்ளார்.
ஆனால், இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "ஜங்னான் பிராந்தியம் சீனாவுடன் ஒருங்கிணைந்தது. நிர்வாக வசதிகளுக்காகவே சில பகுதிகளுக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சீனாவின் இறையாண்மைக்கு உள்பட்டது' என்று பழைய பல்லவியையே பாடியுள்ளார்.
அருணாசல பிரதேச பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டுவது புதிது அல்ல. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா கடந்த 2017-ஆம் ஆண்டு அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த சீன அரசு, பதிலடியாக அருணாசலில் 6 பகுதிகளுக்கு பெயர் சூட்டுவதாக அறிவித்தது.
இதே போன்று, சீன அரசு "நிலம் மற்றும் மாநில எல்லை சட்ட'த்தை 2021-இல் இயற்றியது. தான் சொந்தம் கொண்டாடும் பகுதிகளை மீட்பதற்கான அதிகாரத்தை அரசுக்கு அந்த சட்டம் வழங்கியது. அதன் ஒரு பகுதியாக, அருணாசலில் 2021-இல் 15 இடங்களுக்கு புதிய பெயரை சீனா சூட்டியது.
இப்போது அதுபோன்றதொரு செயலில் சீனா இறங்கக் காரணம் என்ன? அருணாசல பிரதேச மாநிலம் உருவான 37-ஆவது ஆண்டு தினம் இடாநகரில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அதில் நேரில் கலந்து கொண்டார். தனது இரண்டு நாள் பயணத்தில் அம்மாநில சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
2022 டிசம்பரில் தவாங் செக்டார் பகுதியில் யாங்சே என்ற இடத்தில் உள்ள ஒரு "நிலை'யைக் கைப்பற்ற சீன வீரர்கள் முயன்றபோது, இந்திய ராணுவ வீரர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜி20 மாநாடு தொடர்பாக பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு வகையான கூட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஓர் அங்கமாக, அருணாசல பிரதேச மாநில தலைநகரான இடாநகரில் கடந்த வாரம் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம், எல்லையில் மோதல், ஜி20 கூட்டம் ஆகிய இவை அனைத்தும் இப்போதைய பெயர் சூட்டல் விவகாரத்துக்கு காரணமாக இருக்கக்கூடும்.
சீன பத்திரிகையாளர்களை அண்மைக்காலமாக இந்தியா வெளியேற்றவில்லை. ஆனாலும், "சீன பத்திரிகையாளர்களை இந்திய அரசு நியாயமற்ற முறையில் நடத்தியதற்கான பதில் நடவடிக்கை' என்று கூறி பெய்ஜிங்கில் பணியாற்றும் "பிரசார் பாரதி' செய்தியாளர் அன்ஷுமன் மிஸ்ரா, "தி ஹிந்து' ஆங்கில நாளிதழின் செய்தியாளர் அனந்த் கிருஷ்ணன் ஆகியோரின் நுழைவு இசைவை (விசா) முடக்கியுள்ளதாக சீன அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) அறிவித்துள்ளது.
நாட்டின் எல்லைப் பகுதி கிராமங்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிவித்துள்ள "துடிப்பான கிராமங்கள்' என்ற திட்டத்தை அருணாசலில் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள கிபிதூ என்ற கிராமத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். அமித் ஷாவின் அருணாசல் பயணத்துக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 2009-இல் அருணாசலுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றபோது அதை சீனா கடுமையாக எதிர்த்தது.
2014-இல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, எல்லைப் பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது. இதுவும் சீனாவை எரிச்சலடையச் செய்திருக்கிறது. ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடியுடனும், இந்திய ராணுவத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தியபடியே மறுபுறம் எல்லையில் படைகளைக் குவித்து வருகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2020 ஜூனில் சீன எல்லைப் பகுதியில் இருநாட்டுப் படைகளுக்கும் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் இன்னுயிர் ஈந்தனர். தொடக்கத்தில், தங்கள் வீரர்கள் இறப்பு குறித்து மெளனம் காத்த சீனா, நான்கு வீரர்கள் இறந்ததாக 2021 பிப்ரவரியில் ஒப்புக் கொண்டது.
அதன் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே பல சுற்றுகள் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும், சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை.
நாம் போரை விரும்பாவிட்டாலும், சீனா அமைதியாக இருக்காது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் உணர்த்துவதால் இந்தியா எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...