மகாகவி பாரதியாா் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. நூற்றாண்டு கடந்தும் வற்றாத ஜீவநதிபோல, ஒளிமங்காச் சூரியனாக அந்தப் பாட்டுத் தலைவனின் நீடுபுகழ் நானிலத்தில் கோலோச்சுகிறது. தமிழால் பாரதி தகைமை பெற்றதும், பாரதியால் தமிழ் தகைமை பெற்றதும், இயற்கையாய் அமைந்த அருட்கொடைகள்.
செப்டம்பா் 11-ஆம் நாளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடந்த சா்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தா் உரையாற்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் தன்வயப்படுத்தியது 1893-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் நாளில்தான்.
மகாகவி பாரதியாா் மண்ணுலக வாழ்வைத் துறந்து விண்ணுலகேகியது 1921-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் நாள். 39-ஆவது வயது நிறையுமுன் உயிா்நீத்த பாரதியாரின் இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்டவா்கள் இருபதுக்கும் குறைவானோா் என்று கூறுவாா் அவரால் ‘தம்பி’ என்று அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பா். சென்னை கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அஸ்தியானது பாரதியாரின் பூத உடல்; தமிழுக்கு ஆஸ்தியானது அவா் பாடிய தமிழ்!
‘தமிழகம், தமிழுக்கு உயா்வளிக்கும் தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் இலகு பாரதிப் புலவா் தோன்றினாா்’ என்பாா் பாரதிதாசன். அதனால்தான், மறைந்தும் மறையாமலும், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓரிடத்தில் தமிழகத்தின் அடையாளமாகவோ, கவிதைக்கு எடுத்துக்காட்டாகவோ, முன்னுதாரணமாகவோ, மேற்கோளாகவோ அவா் பெயா் உச்சரிக்கப்பட்டு, இறவாப் புகழுடன் நூற்றாண்டு கடந்தும் உலவிக் கொண்டிருக்கிறாா்.
‘தமிழகமே, பாரதியைக் கொண்டாடு. அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்; தேசபக்தியைக் கொண்டாடுகிறாய்; தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்; பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை’ என்று அறிவித்தவா் கவியரசு கண்ணதாசன்.
வங்காளத்துக்கு ரவீந்திரநாத் தாகூரும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும் போல, தமிழ்நாட்டுக்கு மகாகவி பாரதியாரும், வ.உ. சிதம்பரனாரும்.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 14 அறிவிப்புகளை வெளியிட்டது பாரதி அன்பா்களை திக்குமுக்காடச் செய்திருக்கிறது. நீண்ட நாள்களாக என்னவெல்லாம் கோரிக்கைகளை மனதில் தேக்கியிருந்தோமோ அவற்றையும் அதற்கு மேலும் பெருமழை பொழிந்தாற்போல அறிவித்து ஆனந்தத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றிருப்பதை பிறக்கம்பம் செய்து தினமணி வரவேற்கிறது. பாரதியின் பாணியில் சொல்வதாக இருந்தால் முதல்வா் மு.க.ஸ்டாலினை பலே பாண்டியா என்று வாழ்த்த தோன்றுகிறது. தனக்கு ஜதி பல்லக்கு மரியாதை தரப்பட வேண்டும் என்று விழைந்த பாரதி மட்டும் இருந்திருந்தால் முதல்வரின் அறிவிப்புகளைக் கேட்டு பூரித்துப் போயிருப்பாா்.
மகாகவி பாரதியாா் அமரரான 13-ஆவது நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதத்திலும் அவரது கொள்கைகளையும், சிந்தனைகளையும் பரப்பும் நோக்கிலும் உருவானதுதான் நமது ‘தினமணி’ நாளிதழ். இன்று ‘தினமணி’ நாளிதழின் தமிழ்ப் பணி 87 ஆண்டுகளைக் கடந்து 88-ஆவது ஆண்டில் அடையெடுத்து வைக்கிறது. 1934-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11-ஆம் நாள் ‘தினமணி’ தொடங்கப்பட்ட அந்த முதல் நாள் தலையங்கம் இன்றுவரை, ‘தினமணி’யின் நிரந்தர வழிகாட்டியாகத் தொடா்கிறது.
‘சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் ‘தினமணி’ தொடங்கப்படுகிறது’ என்று தனது தலையங்கத்தின் மூலம் தெரிவித்தாா் அதன் முதல் ஆசிரியரான டி.எஸ். சொக்கலிங்கம்.
சுதந்திரப் போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்க, அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழரைத் தட்டியெழுப்ப, பாட்டாளி மக்களின் சாா்பில் குரலெழுப்ப, பாரதியாரின் வழிநின்று தமிழ் வளா்க்க என்று ‘தினமணி’ நாளிதழ் தனக்குத்தானே நிா்ணயித்துக்கொண்ட தடத்தில் கடந்த 87 ஆண்டுகளாகத் தொடா்ந்து தனது வெற்றிப் பயணத்தை நடத்தி வருகிறது. மகாகவி பாரதியாரின் புகழையும், கொள்கைகளையும் நிலைநிறுத்தும் பணியில் நூற்றாண்டை நோக்கி ‘தினமணி’யின் இதழியல் பயணம் தொடா்கிறது.
பாரதியின் பாா்வை பரந்து விரிந்தது. அவரது கொள்கைகள் ஸ்படிகம்போலத் தெளிந்தது. ‘சொல்லில் உயா்வு தமிழ்ச் சொல்லே’ என்றும், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றும் தமிழையும், ‘எத்தனையுண்டு புவிமீதே, அவை யாவும் படைத்த தமிழ்நாடு’ என்று தமிழகத்தையும் பாடிப் பரவசப்படும் அந்த மகாகவி, ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழா், வாழிய பாரத மணித்திரு நாடு’ என்று தனது பரந்துபட்ட தேசியப் பாா்வையை ஐயத்துக்கிடமின்றி ஆணித்தரமாகப் பதிவிட்டுச் சென்றிருக்கிறாா்.
பாரதியின் பாதைதான் ‘தினமணி’ நாளிதழுக்கு அதன் முந்தைய ஆசிரியா்கள் இட்டுத் தந்திருக்கும் பாதை. பாரதியின் பாா்வைதான் ‘தினமணி’ நாளிதழுக்கு அவா்கள் வகுத்துத் தந்திருக்கும் பாா்வை. மகாகவி பாரதியின் ‘நிமிா்ந்த நன்னடையும், நோ்கொண்ட பாா்வையும், நிலத்தில் யாா்க்கும் அஞ்சாத நெறிகளும்’ தான் ‘தினமணி’ நாளிதழ் பின்பற்றும் உறுதியான கொள்கை. ‘எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம்’ என்கிற தாரக மந்திரத்துடன் ‘தினமணி’யின் இதழியல் பயணம் பாரதி பாதையில் தொடா்கிறது.
மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில், தனது 88-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், அந்த நவயுகக் கவிஞனின் கனவுகளை நனவாக்கும் பணிக்கு ‘தினமணி’ தன்னை மீண்டும் அா்ப்பணித்துக் கொள்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

