நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சொன்னதைச் செய்கிறார்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆறாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் 500 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையொப்பமிட்டார். தற்போது அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு, 500 கடைகள் மூடப்படுகின்றன. நல்லதொரு தொடக்கம். பாராட்டுக்குரியது. தமிழகத்தில் மெல்ல மெல்ல, படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:32 pm

ஆசிரியர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆறாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் 500 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையொப்பமிட்டார். தற்போது அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு, 500 கடைகள் மூடப்படுகின்றன. நல்லதொரு தொடக்கம். பாராட்டுக்குரியது. அவர் அறிவித்ததைப் போலவே, தமிழகத்தில் மெல்ல மெல்ல, படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார்.

விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 27 முதல் 30 கடைகள் வரை மூடப்பட்டிருப்பதும், மற்ற மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள கடைகளையும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது, மதுவிற்பனை, மதுக்கடைகளின் அமைவிடம் ஆகியவைக் குறித்து விவரமான கணக்கெடுப்புக்குப் பின்னரே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது ஊகிக்க முடிகிறது.

500 கடைகளை மூடுவதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ.6 கோடி விற்பனை குறையும் என்று "டாஸ்மாக்' தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இது நட்டமல்ல; மக்கள் நல்வாழ்வுக்கான முதலீடு. புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் மது அருந்துபவர்களாக இருந்தால், உட்கொள்ளும் மருந்து பயன் தருவதில்லை என்பதையும், மதுவின் தீமைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நன்மையே மிஞ்சும்.

இந்த நல்லதொரு தொடக்கத்தின் அடுத்த நகர்வாக தமிழக அரசு மேலும் சில நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மதுக்கூடங்களின் (பார்) எண்ணிக்கையைக் குறைத்தல்; நட்சத்திர ஓட்டல்கள் தவிர்த்து மற்ற ஓட்டல்களில் செயல்படும் பார்களின் உரிமத்தை ரத்து செய்தல்; 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மதுக்கடையில் மது விற்பனை கிடையாது என்பதை உறுதிப்படுத்துவது; போலி மதுபான விற்பனையை ஒடுக்குவதில் மேலதிகமான கவனம் செலுத்துதல் ஆகியவைதான் அந்த நடவடிக்கைகள்.

தமிழ்நாட்டில் மதுக்கூடங்களின் எண்ணிக்கை 3,877 ஆக உள்ளது. பெரும்பாலான மதுக்கூடங்கள், "டாஸ்மாக்' மதுக்கடைகளின் அருகிலேயே அமைந்துள்ளன. தற்போது 500 கடைகள் மூடப்பட்டுள்ளன என்ற போதிலும், மதுக்கூடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாத நிலையில், இந்த மதுக்கூடங்கள் செயல்படும். இங்கே பணியாற்றும் ஊழியர்களே மது பாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் முறையற்ற போக்கு உருவாகும் வாய்ப்பு ஏற்படும். ஆகவே, 500 மதுக்கடைகளின் அருகில் உள்ள மதுக்கூடங்களின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும். மதுக்கூடங்களின் எண்ணிக்கையைப் பெருமளவு ரத்து செய்தாலும் தவறில்லை.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் குடித்துவிட்டு கல்விச்சாலைக்கு வருவதும், தகராறுகளில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. ஆகவே, 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை கிடையாது என்பதோடு, மது விற்பனையை உரிய அடையாள அட்டையை (ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை) காட்டுவோருக்கு மட்டுமே என்பதை முறைப்படுத்த வேண்டும். இதனால், மது அருந்தும் இளையோர் கூட்டத்தின் எண்ணிக்கை சற்று குறையும். மேலும், அடையாள அட்டைகளின் எண்கள் பதிவு செய்யப்பட்டு மது விற்கப்படுவதால், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஒரு தனி நபருக்கான மது அளவைக் குறைத்து (ரேஷன்) வழங்குவதற்கு இயலும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும் மிகவும் எளிதானது போலி மதுபானம் தயாரிப்பது. எரிசாராயமும் தண்ணீரும் இருந்தால், மதுபானம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குடிசைத் தொழில்போல மிக எளிதானது என்பதால், "டாஸ்மாக்' போன்றே போலி முத்திரையுடன் போலி மதுபான விற்பனையை சமூக விரோதிகளும், சில அரசியல்வாதிகளும் காவல் துறைக்குத் தெரிந்தே நடத்துவார்கள். இதனால், அரசின் மதுவிலக்கு நோக்கம் பாதிக்கப்படுவதோடு, தனிநபர்கள் சிலர் போலி மதுவிற்பனையால் கொள்ளை லாபம் பார்க்கும் நிலைமை உருவாகும்.

எரிசாராயம் கடத்தல் மற்றும் போலி மதுபான விற்பனையைத் தடுத்தல் இரண்டும் சாத்தியமாக வேண்டுமெனில் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர் நேர்மையானவர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தால் மட்டுமே முடியும். இதை அரசு எப்படி உறுதிப்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை.

வேலையற்ற இளைஞர்களுக்குத் தாற்காலிக வேலை வழங்குவது என்கிற நோக்கத்தில் "டாஸ்மாக்' விற்பனை நிலையங்களில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் நிரந்தரப்படுத்தப்படுவதும், உரிமை கோருவதும் எப்படி நியாயமானதாக இருக்க முடியும்? குறுகிய கால வேலை அடிப்படையில் மட்டுமே அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதுதான் இதற்குத் தீர்வாக இருக்கும்.

"டாஸ்மாக்' ஊழியர்களை அருகில் உள்ள இடங்களில்தான் பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை சாத்தியமா என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் "டாஸ்மாக்' ஊழியர் சங்கங்கள் பிடிவாதமாக இருப்பார்களேயானால், மாற்றுப்பணி வழங்குவதில் ஏற்படும் சிக்கலே, மதுக்கடைகளை மேலும் கூடுதலாக மூடும் நடவடிக்கைக்குத் தடையாக நிற்கும். ÷ஆகவே, மதுக்கடை ஊழியர்களுக்கு எவ்வாறு, எங்கே மாற்றுப்பணி வழங்குவது என்பதை அரசு தீர்மானிப்பதில் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கமும் தலையிடாமல் இருப்பது, மதுவிலக்கை அமல்படுத்துவதை விரைவுபடுத்தும். மதுவிலக்குக்காகப் போராட்டங்கள் நடத்திய எதிர்க்கட்சிகள், இப்போது மதுவிலக்கு அமல்படுத்தப்படும் போது, ஊழியர் பிரச்னையை எழுப்பி அதற்கு முட்டுக்கட்டை போடுமேயானால் அவர்களது போலித்தனம் வெளியாகிவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மலர, அனைத்து தரப்பினரும் துணை நிற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.